“போதும் போர்- இனி வேண்டாம், வேண்டாத போர். அதிபர் புட்டின் இதை நிறுத்த வேண்டும்“

போதும் போர்

“பக்கத்து பலமான நாடான ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு உணர்வுகளை அலட்சியம் செய்து விட்டு, மேற்கின் “நேடோ” பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய, “அகலக்கால்” வைத்ததால் உக்ரைன் இன்று ஆபத்தில் சிக்கிக்கொண்டது, என்றுதான் “உக்ரைன் நெருக்கடியை” வர்ணிக்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து தனது முக நுாலில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் வந்து கைகொடுக்கும் உண்மை நண்பர்களை உக்ரைன் இன்று தேடுது”, என்று தாம் நம்பிய நண்பர்கள் தமக்கு தான் எதிர்பார்த்த அளவுக்கு இன்று உதவில்லை என்று உணர்சி வசப்பட்டு உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி விரக்தியாக பேசும் அளவுக்கு நிலைமை முற்றி விட்டது.

அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள், எந்த சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவுடன் நேரடி யுத்தத்திற்கு தயார் இல்லை.

அதிகபட்சமாக பொருளாதார தடை விதிக்கவும், உக்ரைனுக்கு நிதி உதவி தரவும் மட்டுமே மேற்கு நாடுகள் தயார். பொருளாதார தடைகூட உடன் பயந்தராது. உண்மையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டிய தேவை நிறைய அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உண்டு.

ரஷ்யாவுடன் நேரடி யுத்தம் செய்ய தயார் இல்லை. இலேசில் செய்யவும் மாட்டார்கள். அது 21ம் நூற்றாண்டு உலக அணு ஆயுத யுத்தமாக மாறி விடுமல்ல?

2ம் உலக போரின் போது அமெரிக்காவிடம் மாத்திரமே கூடக்குறைய அணு வல்லமை இருந்தது. அதை குண்டாக செய்து, அப்போது சரணடைய தயாராகிவிட்ட நிலையிலும் ஜப்பானில் போட்டு பரீட்சித்து பார்த்தார்கள்.

நமக்காக மேற்கு நாடுகள் ரஷ்யாவுடன் போர் செய்யும் என்ற தானும் நம்பி அந்த எதிர்பார்ப்பை தன்நாட்டு மக்களுக்கும் தந்தமை, உக்ரைன் செலென்ஸ்கியின் முட்டாள்தனம்.

ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளுடன் மோதி “அணு ஆயுத” யுத்தத்தை ஒருபோதும் அமெரிக்கா நடத்தாது. இந்த விதி சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்ற உலக அணு ஆயுத நாடுகள் எல்லாருக்கும் பொருந்தும்.

அதேவேளை தமது எல்லைபுறத்தில் வந்து வாலாட்ட தமது பெரிய எதிரியின் எடுபிடி நாடுகளுக்கு பெரிய நாடுகள் ஒருபோதும் இடம் கொடுக்காது.

அப்படிதான் 1960களில் ஒருமுறை கியூபா சோவியத் ஏவுகணைகளை தம் நாட்டில் பொருத்தி அமெரிக்காவுடன் விளையாட போக, 3ம் உலக யுத்தம் வருமா என உலகம் பயந்தது. பின்னர் பிடல் காஸ்ட்ரோ ஏவுகணைகளை அகற்றினார்.

இந்தியாவுடன் இன்று அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக உள்ளன. இது சீனாவுக்கு தெரியும்.

ஆனால் இவர்கள் வந்து தாய்வானுடன், தென் கொரியாவுடன், வியட்நாமுடன், மியன்மாருடன் சேர்ந்து சீனாவுடன் வாலாட்ட சீனா விடாது.

அதுதான் பெரியா நாடுகளின் “பொட்டம் லைன்” (Bottom Line) என்ற குறைந்தபட்ச நெகிழ்வு கோடு.

1980களில் இலங்கையின் ஜயவர்தன இந்தியாவை சீண்டி சிக்கலுக்கு உள்ளானதும் இப்படிதான். இன்றும் சீனா வரும் என்று ராஜபக்ச சீண்டி சிக்கலுக்கு உள்ளாக போவதும் இப்படிதான். இன்று ரஷ்யாவை சீண்டி உக்ரைன்.

பெரிய நாடுகள் தமது எதிரியான பெரிய நாட்டின் எடுபிடி நாட்டுடன் மோதுவார்கள். அப்படிதான் இன்றைய ரஷ்ய-உக்ரைன் யுத்தம்.

போர் நடப்பது என்னவோ உக்ரைனில், ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் என்பது பகிரங்க உண்மை. ஆனால், உறங்கும் உண்மை என்னவோ, இது ரஷ்யா-அமெரிக்க யுத்தம் என்பதே. அமெரிக்காவுடன் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நிற்கின்றன.

சின்னஞ்சிறிய நாடுகளுடன்தான் பெரிய நாடுகள் நேரடி யுத்தம் செய்வார்கள்.

இப்போதான் இது உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு புரியுது. அதுதான் அழுது வடிக்கிறார்.

என்னவோ, பாவப்பட்ட உக்ரைன் மக்களுக்காக நான் கண்ணீர் வடிக்கிறேன். பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும்… நாட்டின் இலையை நோக்கி ஓடுவதை காண மனது கேட்கவில்லை.

அதிபர் புட்டின் இதை நிறுத்த வேண்டும். போதும் போர். இனி வேண்டாம், வேண்டாத போர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil News