Home ஆய்வுகள் இனவழிப்பில் கைகோர்த்த இங்கிலாந்து இந்நிலை இனி மாறுமா? -சுடரவன்-

இனவழிப்பில் கைகோர்த்த இங்கிலாந்து இந்நிலை இனி மாறுமா? -சுடரவன்-

தமிழர்களின்  எழுச்சிப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்காவுடன்  கொண்டிருந்த தொடர்புகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை பிரித்தானியா அழித்துவிட்டதாக வெளியான செய்தியினை பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு  ஒத்துக்கொண்டுள்ளது.கடந்த 21.01.2019 அன்று இங்கிலாந்தில் இருந்து வெளியாகும்  மோர்னிங் ஸ்டார்   (Morning Star) பத்திரிகையில் இது தொடர்பில் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சி  ஆரம்பிக்கப்பட்டது முதல் சிறிலங்காவிற்கு பிரித்தானியா வழங்கிவந்த ஒத்துழைப்பு, உதவிகள் தொடர்பான சுமார் 400 ஆவணக்கோவைகள் பிரித்தானிய வெளியுறவு அமைச்சால் அழிக்கப்பட்டமை   ஒரு வரலாற்று நிர்மூலம் என குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.

முன்னர் வெளியுறவு அமைச்சினால் குறிப்பிடப்பட்ட அளவைவிட இருமடங்கான கோவைகள் அழிக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆயுத வர்த்தகத்திற்கெதிரான அமைப்பு  ( Campaign Against Arms Trade (CAAT))  தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.stf 02 இனவழிப்பில் கைகோர்த்த இங்கிலாந்து இந்நிலை இனி மாறுமா? -சுடரவன்-

CAAT பேச்சாளர் ஆண்ட்ரூ ஸ்மித்  கருத்துத் தெரிவிக்கையில் ” இலங்கையில் ஏற்பட்ட மோதல் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது,  பல்லாயிரக்கணக்கான  மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், போரில் பிரிட்டனின் வகிபாகம்   அரசாங்கத்திற்கு சங்கடமாக இருக்கலாம், ஆனால் நீதியும் பொறுப்புக்கூறும் தன்மையும் இருந்தால் அது முற்றிலும் வெளிக்கொணரப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.” என்றார்.

“தமிழ் மக்களின் சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்குமான  போராட்டத்திற்கெதிராக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களுக்கு மேற்குலகு ஆதரவளித்தது. இந்த ஆதரவு இயல்பாவே வரலாற்றை அழிப்பதற்கும் அதை மாற்றி எழுதுவதற்கும் துணைபோகிறது ” என பிரபல பாடகி மாயா அருட்பிரகாசம் மோர்னிங் ஸ்டார் இற்கு தெரிவித்தார்.

பிரித்தானியாவின் இந்த அழிப்பு நடவடிக்கையை மேலும் பல பிரித்தானிய தமிழ் அமைப்புகளும் கண்டனம் செய்துள்ளன.இவை குறித்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல்கள்

இந்த கோப்புக்கள்  அழிப்பில் காட்டப்பட்ட அவசரம், எஞ்சியுள்ள கோப்புகளையும் அழிப்பதில் காட்டப்படும் முனைப்பு என்பன பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. பிரித்தானியாவின் இத்தகைய ஒத்துழைப்புகள், உதவிகள் என்பன அரசியல் இராசதந்திர படைத்ததுறை நியமங்களுக்கு உட்பட்டதாக இருந்திருப்பின் இந்த கோப்புகளை அழிக்கவேண்டிய அவசியம், அவசரம் ஏற்பட்டிருக்காது.

இந்தவகையில் பிரித்தானியா  நீதிக்கு அப்பாற்பட்ட வகையில், அனைத்துலக நெறிமுறைகள், சட்டங்களை மீறிய வகையில் சிறிலங்காவின் இனவழிப்புப் போருக்கு உதவியுள்ளது என்ற ஒரு முடிவுக்கு வர வழிசெய்கிறது.பிரித்தானிய அரசின் இத்தகைய செயற்பாடுகள் போரின் ஆரம்பகாலகட்டத்தில் மட்டுமே இடம்பெற்றன எனக்கூறுவோரும் உண்டு. ஆனால் தமிழருக்கு எதிரான பிரித்தானியாவின் இத்தகைய செயற்பாடுகள் காலனித்துவ காலம்முதல்  இன்றுவரை இடம்பெற்றுக்கொண்டிருப்பதே உண்மைநிலையாகும்.

பிரித்தானியா இலங்கையைவிட்டு வெளியேறும்போது தமிழரின் வலராற்று உரிமையை, அவர்களின் அபிலாசைகளை, புறந்தள்ளி  ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் ஆட்சிஅதிகாரத்தை சிங்களவர் கையில் கொடுத்துச் சென்றது முதல், தற்போது  ஐரோப்பாவில் தமிழரின் உரிமைக்குரலை நசுக்குவதற்காக அவர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் வரை, பிரித்தானியாவின் கரம் சிறிலங்கா அரசுடன் இறுக்கமாகப் பிணைந்தேயுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் சிறிலங்கா படைத்தரப்புடனான பிரித்தானியாவின் செயற்பாடுகள் பற்றிய சில  தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தன. ஆனால் அவைபற்றி யாரும் அதிகம் அக்கறை கொள்ளவில்லை.

பிரித்தானியாவின்  SAS   ( Special Air Service)  மற்றும் கூலிப்படை அமைப்பான  கினி மினி (Kini Mini Services) போன்ற அமைப்புகள் சிறிலங்கா படையினருக்கு நேரடியாக  அங்கு பயிற்சி வழங்கியது மட்டுமின்றி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன.

பின்னாளில் இவர்களில் சிலர் தமது நடவடிக்கைகள் குறித்து நூல்களை வெளியிட்டிருந்தனர். இவ்வகையில் இலங்கையில் சிறிலங்கா படையினருடன் பணியாற்றிய Tim Smith என்பவர் ஒரு நூலை எழுதியிருந்தார். இந்நூலில், தான் பங்குகொண்ட நடவடிக்கைகள் செயற்பாடுகள் மற்றும் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைகள்  பற்றி அவர் விபரித்துள்ளார். இந்நூலில் படையினரால் நடத்தப்பட்ட பல்வேறு படுகொலைச்சம்பவங்கள் தொடர்பான தகவல்கள், ஒளிப்படங்கள் என்பன உள்ளன. இதில் கொலையாளிகளின் படங்களும் உள்ளடக்கம்.

மற்றும் பிரித்தானியாவின் SAS படைப்பிரிவில் பணியாற்றிய Andy Mc Nab எழுதிய Immediate Action என்ற நூலிலும் படைப்பயிற்சி தொடர்பில் செய்தி காணப்படுகிறது. அதில் ஓரிடத்தில் ஒரு பிரித்தானிய படைவீரர் இவ்வாறு கூறுகிறார்.

” அவர்களுக்கு எதுசரி எதுபிழை என்பது பற்றிய எந்த புரிதலுமில்லை.    அத்துடன் தமிழர்களை அழித்தொழிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த சிந்தனையுமில்லை. நாங்கள் பயிற்சி அளித்ததவர்களில் சிலர் கொடூரமான குற்றம் புரிந்தவர்கள். (They had no understanding right or wrong and thought nothing of wiping out Tamils. Some people we trained committed atrocities. Page -181)”

பிரித்தானிய ஆய்வாளர் phil.miller  எழுதியுள்ள ஆய்வு (Britains Dirty  War against Tamil People 1979 – 2009) படைத்துறை மற்றும் இராசதந்திர ரீதியில் பிரித்தானியாவின் வகிபாகத்தை சற்று ஆழமாக ஆதாரங்களுடன் விளக்குகிறது. தனது முன்னுரையில் அவர் இவ்வாறு கூறுகிறார்

“இராணுவ வரலாற்றின் வேறுபட்ட பகுதிகளை ஒன்றாக்கி காலவரிசைப்படி பார்ப்போமானால், இலங்கைத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை இலங்கை நசுக்குகின்ற ஒவ்வொரு முயற்சியின்போதும் பிரிட்டன் அதனுடன் சேர்ந்துகொண்டு திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக என்னென்ன கொடுமைகளைப் புரிந்தது என்பது விளங்கும். குறிப்பாக சிறிலங்கா, போரை வெல்லமுடியாமல் ஊசலாடும் சமயங்களில்  வேறுவழியின்றி போர்நிறுத்தத்திற்கும் அமைதிஉடன்பாட்டிற்கும் இசைகின்ற சூழல்கள் யாவற்றிலும் பிரித்தானியா அதில் தலையிட்டு அதைக்கெடுத்ததன் தீவிரம் புரியும். “

இவைதான் இன்றுவரை இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் பிரித்தானிய தொடர்ந்தும் இருப்பது தமிழ்மக்களுக்கு மேலும் கெடுதலானது. மாக்கிரட் தச்சர்  முதல் திரேசா மே வரை பிரித்தானிய அரசாங்கங்கள் இந்த நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இனி வரும் நாட்களிலாவது பிரித்தானியா அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகள், அரசியல் கடசிகள் என்று மட்டுமன்றி பிரித்தானியாவின் மக்கள் சமூகத்திடமும் இவ்விடயங்கள் முறையாக கொண்டுசேர்க்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம், அவர்கள் எதிகொண்ட அரைநூற்றாண்டு இனவழிப்பு,  இன்றும் தொடர்கினற திட்டமிடப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகள் பற்றி ஒன்றிணைந்த குரலில் தமிழர்கள் உரத்துப் பேசவேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள்  பிரித்தானியாவில் மட்டுமன்றி தமிழர்கள் வாழுகின்ற தேசங்கள்  எங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றை தமிழர்கள் வாழுகின்ற நாடுகள் என்பதற்கு அப்பாலும் நாம் விரிவாக்குவது பயனுள்ளது. உலகெங்கும் எமக்காக நேசசக்திகளை வென்றெடுப்பது காலத்தின் கட்டாயம்.

இழந்த உரிமைகளை நிலைநாட்டவும் இழைக்கப்பட்ட  கொடுமைகளுக்கு நீதி பெறவும் இத்தகைய செயற்பாடுகள் இன்றைய உலக ஒழுங்கில் தவிர்க்கமுடியாதவை என்பது வெளிப்படை.

– சுடரவன் –

 

 

 

 

 

Exit mobile version