கறுப்பின மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை
வெள்ளை இன மக்களின் மனிதாபிமான அடிப்படையிலான அவரச உதவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்த உலகம் கறுப்பின மக்களின் தேவைகளுக்கு அளிப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளில், மிகச் சிறிய அளவே பிற நாடுகளுக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் .
உக்ரைனுக்கு உதவுவது மிகவும் முக்கியமாக கருதப்படுவதாகவும், ஏனெனில், அது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், எத்தியோப்பியாவில் உள்ள திக்ரே மாகாணம், ஏமன், ஆப்கானிஸ்தான் அல்லது சிரியாவில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி அதே கவனத்தைப் பெறுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த உலகம் உண்மையில் வெள்ளை இன மக்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல கருப்பின மக்கள் மீதும் கவனம் செலுத்துகிறதா என்று எனக்குத் தெரியவில்லை”, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.