Tamil News  
Home செய்திகள் சாணக்கியனின் பிரேரணைக்கு அமைய தேர்தலை நடத்த முடியும் : சட்டமா அதிபர் திணைக்களம்

சாணக்கியனின் பிரேரணைக்கு அமைய தேர்தலை நடத்த முடியும் : சட்டமா அதிபர் திணைக்களம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைக்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இல்லை.

உள்ளடக்கத்தில் ஒருசில சொற்பிரயோகங்களை திருத்தம் செய்து தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

குறித்த குழு அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடிய போது சட்டமா அதிபர் திணைக்களம் தமது தரப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு ஏதுவான வகையில் மூன்று வழிமுறைகளை முன்வைத்துள்ளது.

வாக்களிப்பின்போது விருப்பு வாக்களித்தல், பெண் பிரதிநிதித்துவத்துக்கு வாக்களித்தல், இளைஞர் பிரதிநிதிதித்துவத்துக்கு வாக்களித்தல் என்ற மூன்று வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முறைமையை புரிந்துக் கொள்வதற்கு வாக்காளர்களுக்கு கடினமானதாக அமையும் என்று குழுவின் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் கூட்டங்களில் மேலும் தெளிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version