இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகள் வாக்களிக்க கோரினால் பரிசீலனை; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

ஈழ அகதிகள் வாக்களிக்க கோரினால்
புலம்பெயர்ந்து இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகள் வாக்களிக்க கோரினால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022 – 2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்கான கூட்டம் நேற்று நடந்தபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், “இதுவரை இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் வாக்களிப்பது தொடர்பில் எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. அரசியல்வாதிகளும் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர், புதிய முறைமையிலோ, பழைய முறைமையிலோ அல்லது திருத்தங்கள் செய்யப்பட்டோ விரைவாக மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு” என்றார்.

இந்தக் கலந்துரையாடலில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணைக் குழுவின் செயலாளர் ஹேரத், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹமட், பத்திரண, திவாரட்ண, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ். மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகள் வாக்களிக்க கோரினால் பரிசீலனை; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு