ஜூனுக்கு பின் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: முதன் முறையாக மத்திய அரசு ஒப்புதல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய  மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார வலிமையில் முதல் 20 இடங்களில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பிறகு, முதன் முறையாக அதன் உள்ளகட்டமைப்புப் பணிக்குழுவின் 2 நாள் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் தொடங்கியுள்ளது.

நகரங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுதல், நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு நிதியளித்தல் மற்றும் எதிர்காலத்தை தயார்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.

சர்வதேச மாநாட்டை தொடங்கி வைப்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்ட நாராயண் ரானே, “தற்போது வளர்ந்த நாடுகள் பலவும் பொருளாதார பெருமந்தத்தை எதிர்கொண்டுள்ளன என்பதே உண்மை. இந்தியாவையும் வரும் ஜூனுக்குப் பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டு மக்களை பாதிக்காத வகையில் தடுக்க மத்திய அரசும், பிரதமர் மோடியும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், ” என்று நாராயண் ரானே தெரிவித்தார்.