இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வாகன இறக்குமதியானது, அடுத்த வருடம் இறுதி வரை தொடரும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் பரவலினால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.
உள்நாட்டிலுள்ள டாலர், ஆடம்பர தேவைகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வாகன இறக்குமதிக்குத் தடை, அடுத்த வருடம் இறுதி வரை தொடரும் என பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற நிதி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளதை தம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், பாதிக்கப்பட்டுள்ள அந்த துறை சார்ந்தோருக்கு நிவாரணம் உள்ளிட்ட மாற்று திட்டங்களை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, வாகனங்களின் விலை பலமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.