“அரிசி இல்லை மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” சமல் ராஜபக்சவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

அரிசி இல்லை மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு மற்றும் பாசிப்பயறை உண்ணுமாறு அந்நாட்டின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

“நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா”? என அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அரிசி இல்லை மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள் என்று கூறியுள்ளார்.

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு உள்ளமையை இதன்போது ஏற்றுக் கொண்ட அமைச்சர், அதற்குப் பதிலாக மரவள்ளி, பாசிப்பயறு போன்றவற்றை சாப்பிடலாம் என்றார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக் குறித்து பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்; சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை அமைச்சரின் பேச்சு நினைவுபடுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நன்றி-பிபிசி