உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து உண்மையினை கண்டறிய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிவேண்டி இன்றைய தினம் கறுப்புக் கொடிகளை கட்டுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது அலுவலகத்திற்கு முன்பாக கறுப்புக் கொடியை ஏற்றி வைத்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன் படுகாயங்களும் அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.
அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது அலுலகத்திற்கு முன்பாக இன்று காலை கறுப்புக்கொடியை ஏற்றி தனது ஆதரவினை பேராயருக்கு வழங்கியுள்ளார்.
அனைத்து “இன,மத மக்களும் இணைந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான உண்மையினை கண்டுபிடிக்க அழுத்தங்களை வழங்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 28மாதங்கள் பூர்த்தியடைகின்றது. பேராயர் மல்கம் ஆண்டகை கறுப்புக்கொடிகளை இன்றைய தினம் ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த நிகழ்வில் நானும் இன்று இணைந்திருந்தேன்” என இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கறுப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் விடுத்த வேண்டுகோளை மட்டக்களப்பு மக்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.