“ஓவ்வொரு நாடும் தனது சொந்த மக்களின் நலன்களில் கவனம் செலுத்த வேண்டும், மனித உரிமைகள் குறித்த சர்வதேச கொள்கைகளை தங்கள் நாட்டின் யதார்த்தத்துடன் இணைத்து தங்களிற்கு பொருந்தக் கூடிய முறையை உருவாக்க வேண்டும்“ என சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் ஜியாங் டுவான்(minister Jiang Duan) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 அமர்வின்ஒரு பகுதியாக இடம் பெற்ற நிகழ்வில் சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் ஜியாங் டுவான் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் “மனித உரிமை விடயங்கள் குறித்து அனைத்து நாடுகளும் தொடர்புகளை பேண வேண்டும், அழுத்தங்களை கொடுப்பதற்கான அல்லது மற்றவர்களிற்கு எதிராக ஒருதலைப் பட்ச நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான கருவியாக பயன்படுத்தக் கூடாது.
சில மேற்குலக நாடுகள் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளன. தங்களின் பூர்வீக குடிகளை கொலை செய்துள்ளன.
தங்கள் குற்றங்களிற்காக வருந்தி அதனை திருத்திக் கொள்வதற்கு பதில் அந்த நாடுகள் அரசியல் நோக்கங்களிற்காக ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்காக அப்பட்டமாக பொய் சொல்கின்றன.
அவர்களின் நடவடிக்கைகள் ஐநாவின் சாசனம் மற்றும் கொள்கைகளை மீறியுள்ளன. ஏனைய நாடுகளின் மனித உரிமைகளை பெருமளவிற்கு அது பாதித்துள்ளன” என சீன அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 அமர்வின் ஒரு பகுதியாக இடம் பெற்ற நிகழ்வில், 40 நாடுகளின் பிரதி நிதிகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.