Home செய்திகள் விடுதலை உணர்வுகளை சிதைக்கவே போதை பொருள்: குற்றஞ்சாட்டுகின்றார் சுகாஸ்

விடுதலை உணர்வுகளை சிதைக்கவே போதை பொருள்: குற்றஞ்சாட்டுகின்றார் சுகாஸ்

விடுதலை உணர்வுகளை சிதைக்கவே போதை பொருள்: தமிழர் தாயகத்தை சிதைத்து எதிர்கால சந்ததியினுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்காக, தமிழ் மக்களினுடைய எதிர்கால சந்ததியை அழிப்பதற்காக, தமிழர் தாயகத்தை இலக்கு வைத்து அரசினுடைய மறைமுக அல்லது நேரடி ஆதரவோடு, போதைப் பொருட்கள் குவிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதிக போதைப் பொருள்  தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து இலங்கை கடற்படையின் பாதுகாப்பை மீறி எவ்வாறு  கடத்தி வரப்படுகின்றது? இதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்பது தொடர்பாக இலக்கு மின்னிதழ் சார்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

“உண்மையில் இது ஆழமாக ஆராயப்பட வேண்டியதொரு விடயம். ஏனென்றால், இலங்கை அரசினுடைய கடற்படை, கடந்த காலத்தில் மிக மிக வலுவாக, இறுக்கமாக செயற்பட்டதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகளினுடைய கடற் போக்குவரத்தையும், அவர்கள் கடலினூடாக ஆயுதங்களை கொண்டு வந்ததையும், இலங்கை கடற்படை முறியடித்ததாக  இலங்கை அரசு பெருமையோடு பீத்தி வந்தது.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொண்டு வருவதை இலங்கை கடற்படை முறியடித்தது உண்மை என்றால், ஆயுதம் ஏந்தாத நபர்கள் போதைப் பொருட்களை இலங்கைக்குள் கடத்துவதை இலங்கை கடற்படையால் இலகுவாக முறியடிக்க முடியும். ஆனால் அதையும் தாண்டி போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு இலகுவாக கொண்டு வரப்படுகின்றது என்றால், இங்கே சில கேள்விகள் எங்களுக்கு எழுகின்றன.

முதலாவது, போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை கடற்படையின் பாதுகாப்பை முறியடித்து கடத்துகிறார்களா?

இரண்டாவது, இலங்கை கடற்படை தனது கடற்பரப்பை பாதுகாக்கின்ற திறனை இழந்து விட்டதா?

மூன்றாவது, இலங்கை கடற்படையின் மறைமுக அனுமதியோடுதான், போதைப் பொருட்கள், தமிழர் தாயகப் பிரதேசத்துக்குள் கடத்தப்படுகின்றனவா? என்பது போன்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.

அதுவும், பல கடத்தல் சம்பவங்களின் போது, மூட்டை மூட்டையாக, போதைப் பொருட்கள் மீட்கப்படுகின்றன. ஆனால், சந்தேக நபர்கள் யாருமே கைது செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள். எங்களுக்கு எழுகின்ற கேள்வி, அப்படியானால், அந்த போதைப் பொருட்கள் படகிலே, தாங்களாகவே படகை வலித்து வருகின்றனவா? கடலுக்குள் போதைப் பொருட்களைக் கடத்தி வருகின்ற நபர்கள், எவ்வாறு? அவ்வளவு இலகுவாக மறைகிறார்கள் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே இருக்கிறன.

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

இதனால்தான், நாங்கள் நியாயமாக சந்தேகப் படுகின்றோம். தமிழர் தாயகத்தை சிதைத்து எதிர்கால சந்ததியினுடைய விடுதலை உணர்வை தமிழ் தேசம் பற்றிய உணர்வுகளை சிதைப்பதற்காக, தமிழ் மக்களினுடைய எதிர்கால சந்ததியை அழிப்பதற்காக தமிழர் தாயகத்தை இலக்கு வைத்து அரசினுடைய மறைமுக அல்லது நேரடி ஆதரவோடு, போதைப் பொருட்கள் வடக்குக்குள், கிழக்குக்குள் குவிக்கப்படுகின்றதா? என்ற நியாயமான சந்தேகமும் ஏற்படுகிறது.

இவற்றை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால், இலங்கையினுடைய கடற்படையினுடைய வலு பற்றி நாங்கள் ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால், இலங்கையினுடைய கடற்படை வலுவாக இருப்பதாகவே, இலங்கை யினுடைய கடற்படை அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட கடற்படை ஏன் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவில்லை அல்லது தடுக்க முடியாமல் இருக்கிறது என்பன எல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளன. ஆனால் என்னுடைய மேற்கூறிய பதிலுக்குள் அந்த விடை தெளிவாக உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Exit mobile version