இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்
அந்த வகையில் 14 உயிர்காக்கும் மருந்துகளில் ஒரு மருந்தும், 646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகளும் தற்போது கையிருப்பில் இல்லை. அதேபோன்று, 486 அத்தியாவசியமற்ற மருந்துகளில் 45 மருந்துகள் கையிருப்பில் இல்லை. அடுத்த மூன்று மாதங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு இலங்கையில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் தாமதமாவதால் , மருந்துகளை இறக்குமதி செய்வதில் 90 நாட்கள் வரை தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை மருத்துவமனையில் மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் , மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நாட்டில் பெரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனால் பெர்னாண்டோ நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஒரு பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தினால் முழு நாட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.