21 ஆவது திருத்த வரைவு இன்று அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்பு

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் முழுமையான அறிக்கையினை நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவையின் அங்கீகரத்தை பெற்று இன்றைய தினமே 21 ஆவது திருத்த வரைவினை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டு ஒருவார காலத்துக்குள் வரைவினை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நீதியமைச்சர் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

21 ஆவது திருத்த வரைவினை இறுதிப்படுத்தும் வகையிலான சந்திப்பு நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களும் இணக்கப்பாட்டுக்கு வந்த 4 திருத்த யோசனைகளை முழுமையாக செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பிக்கும் 21 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு வாரகாலத்துக்குள் திருத்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். 21ஆவது திருத்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒருவார காலத்துக்குள் திருத்த வரைவை இலங்கை பிரஜைகள் எவரும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tamil News