கொழும்பில் காவல்துறை பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – மனோ கணேசன்

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட காவல் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும்  காவல்துறைப் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,“காவல்துறை  பதிவு பற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு வடிவங்கள் வழங்குவதை உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் ஏகநாயக இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

“காவல்துறையினருக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும். மேலும் இது ஒரு காவல்துறை  ராஜ்யம் அல்ல. காவல்துறை  சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும். எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை.  ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர காலங்கள் அல்ல ” என அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.