வடபகுதி மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடினால் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் – ஜேசுதாசன்

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்

இலங்கை அரசாங்கம் வடபகுதி மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு கலந்துரையாடலை முன்னெடுப்பதனால் வடபகுதி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும். அது தவிர மீனவர்களுக்கிடையே கலந்துரையாடல் செய்வது அநாவசியமானது என மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடலின் தேசிய இணைப்பாளரும், வடகிழக்கு பிராந்தியங்களிற்கான இணைப்பாளருமான அன்ரனி ஜேசுதாசன்   தெரிவித்துள்ளார்.

இலக்கு ஊடகத்திற்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை இந்திய மீனவர்களுடைய பிரச்சினை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.

கடந்த 23ஆம் திகதி கொழும்பிலே தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு  வடக்கு கிழக்கு, மேல் மாகாணம், தென் மாகாணம், நாட்டின் மத்திய பகுதிகளில் இருந்தும் கூட   ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள்.

இந்த போராட்டத்தின் போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும், ஜனாதிபதி செயலகத்தினுடைய தொடர்பாடல் பிரிவின் இரண்டு செயலாளர் களையும்  சந்திக்க கூடியதாக இருந்தது

இந்நிலையில், நான்கு முக்கியமான விடயங்களை அடிப்படையாக கொண்டு பாராளுமன்றத்திற்கு அதாவது அமைச்சரவைக்கு ஒரு பத்திரம் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும்  இந்திய இழுவை பிரச்சினைகளுக்கு இந்திய அரசாங்கம் தலையிட்டு அதற்கான தீர்வை வழங்குவதற்கான முயற்சிகள் எடுத்தல், சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை முழுமையாக தடுத்தல், இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இழப்பீடு   வழங்குதல், 2017 இலக்கம் 11 சட்டத்தையும், 2018 இலக்கம் 1 சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டது.

அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட இந்த நான்கு கோரிக்கைகளையும் அடிப்படையாக கொண்டு செயற்பட்டால் இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என நாங்கள் பார்க்கிறோம்.

இந்நிலையில், கச்சத்தீவிலே மீனவர்களுக்கிடையே கலந்துரையாடல் ஒன்று  நடத்த வேண்டும் என வர்ணகுலசூரியன் என்ற மீனவ தலைவர் கூறியிருக்கிறார். இது  தேவையற்றது. ஏனென்றால் இந்திய மீனவர்கள் எப்போதும் எங்களுக்கு இரண்டு, மூன்று வருடம் அவகாசம் கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆகவே இது மீனவர்களுக்கிடையே தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை கிடையாது. இது அரச, ராஜதந்திர ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. ஆனால் ஒரு விடயத்தை நாங்கள் கோருகின்றோம். இந்திய, தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு இலங்கை மீனவர்களுக்கும் இடையிலே ஒரு கலந்துரையாடல் செய்வது நல்லது.

மேலும் வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளை தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு தெரிய வேண்டும் என்றபதற்காக    தமிழ்நாட்டினுடைய  முதலமைச்சரோடு கலந்துரையாடலை முன்னெடுப்பது நல்லது. அது தவிர மீனவர்களோடு கலந்துரையாடல் செய்வது அநாவசியமானது. அது பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வழி அல்ல. பிரச்சினையை தள்ளிப் போடுவதற்கான ஒரு வழியாக இருக்கும்” என்றார்.

Tamil News