Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் விவகாரத்தில் ஐ.நாவை தலையிட கோரிக்கை

சிறீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் விவகாரத்தில் ஐ.நாவை தலையிட கோரிக்கை

இன்று உலகம் முழுவதும் சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த 2009ம் ஆண்டு தமிழர் தாயகப்பகுதியில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்த நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் யுத்த முடிவில் அரச படைகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தமது குழந்தைகளுடன் பெற்றோர்கள் சரணடைந்தனர். ஆனால் இன்று வரையில் இவ்வாறு  சரணடைந்தவர்கள் குறித்து எந்த தகவலையும் சிறீலங்கா அரசு வெளியிடவில்லை. மேலும் பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள் தொடர்பிலும் தகவல் இல்லை.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் (வடக்கு கிழக்கு) ஐ.நாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

அதில்,

“மாண்புமிகு உயர் ஆணையாளர் அவர்களுக்கு வணக்கம்,

சிறீலங்கா அரசாங்கத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகள் இருக்குமிடம் அறிந்திட உங்கள் உதவி நாடி எழுதுகிறோம். உங்கள் வழிகாட்டலில் எங்கள் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உலகிலேயே சிறீலங்கா அரசாங்கமே எட்டுமாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் திகழ்கிறது. இந்தக் குழந்தைகள் அனைவரும் தமிழினக் குழந்தைகளே. எமது இந்தக் குழந்தைகளில் பலரும் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு 2009 மே மாதம் போரின் முடிவில் எவ்விதக்கேடும் நேரிடாது என்ற உறுதிமொழிகளை நம்பி சிறீலங்கா படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். 11 ஆண்டு காலம் கழிந்த பிறகும் இந்தக் குழந்தைகளைப் பற்றியோ அவர் தம் பெற்றோர் பற்றியோ அரசினரிடமிருந்து பதிலேதும் இல்லை.

சில குழந்தைகள் சிறீலங்காப் படைகளால் பெற்றோர் சரணடைந்த போது உடன்சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தக் குழந்தைகள் இவ்வாறு சரணடைந்து கடத்தப்பட்டதற்குக் கண்கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர். பல்லாண்டுக் காலமாய் இந்தக் குழந்தைகளின் உறவுகள் இந்தக் குழந்தைகளைத் தேடித் தவிக்கின்றார்கள். சிறீலங்காவில் மட்டுமின்றி, ஐநா மனிதவுரிமைப் பேரவையிலும் கூட சிறீலங்காப் படைகளும் இராணுவ உளவுத்துறையும் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்தத் தேடல் தொடர்கிறது.

காணாமல் செய்யப்பட்ட எம் குழந்தைகள் பால், கவனம் ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பிலும் துடிப்பிலும், தொடர்ந்து அமைதிவழி போராட்டங்களும், உணவு மறுப்புப் போராட்டங்களும் செய்து வருகிறோம். ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் எத்தனையோ வேண்டுகோள்கள் விடுத்தும் கூட, சிறீலங்கா அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்தத் தமிழ்க் குழந்தைகள் பற்றிய விவரங்கள் ஏதும் தர மறுத்து வருகிறது.

சிறீலங்காவின் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா 2016 ஜனவரி 15ஆம் நாள் வடக்கு மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம் நகரில் ஒரு பொது நிகழ்வில், ‘2009 மே மாதத்தில் போர்முடிவில் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை.’ என சொன்னார். எங்கள் குழந்தைகளும் உயிருடனில்லையோ என்று கவலைப்படுகிறோம். இவர்கள் இன்றிருந்தால் ஆகச் சிறு குழந்தைக்கு இப்போது கிட்டத்தட்ட பதினொரு வயதாகியிருக்க வேண்டும்.

ஐ.நா. மன்றத்தின் கட்டாயப்படுத்தப்படும் சட்டங்களின் (Enforced Act) விதப்புரைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இருக்கின்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சரத்துக்களுக்கு முரணாக எமது குழந்தைகள் சிறீலங்கா அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா நெறிமுறைகளுக்கு அமைவாக இது ஒரு அப்பட்டமான, மனித குலத்திற்கெதிரான குற்றமாக பார்க்கப்படுவதால் ஐ.நா உயர்ஸ்தானிகரும், ஐ.நா. சபையும் எமது குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடையத்தில் நேரடியாக தலையிட்டு எமது குழந்தைகளை மட்டுமல்லாது இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் மீட்டுத்தருமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.

இப்போது நாம் இந்த அரசை நோக்கி எமது குழந்தைகளை மீட்டுத்தரவேண்டியோ அல்லது எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டியோ அல்லது அடிப்படை உரிமைகளுக்கான அமைதி வழி ஒன்றுகூடலையோ செய்ய முடியாத அளவிற்கு இராணுவப் புலனாய்வாளர்களாலும் அரச படைகளாலும் புதிய உயிர் அச்சுறுத்தலகளுக்குள் ஆட்பட்டுள்ளோம்.

நாம் அரச விரோதிகள் என்றும் பயங்கரவாதிகளென்றும் அச்சுறுத்தப்படுகின்றோம். தொலைபேசி மூலமான மிரட்டல்களை அரசபுலனாய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். எமது அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு தடைகளை விதிப்பதும், உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை போலி புனைதல்கள் மூலம் வழக்கிட்டு கால வரையற்று சிறையிலடைக்கவும் கோட்டபாய அரசு முயற்சிக்கின்றது. இது ஐ.நா.சபையின் கட்டாயப்படுத்தப்படும் சட்டப்பிரிவுகளின் விதந்துரைகளின்படி’சட்டத்திற்கு புறம்பானவிதத்தில் துன்புறுத்தல், பயமுறுத்தல் மற்றும் பழிவாங்குதல் என வரைவிலக்கணப்படுத்துகின்றது. எனவே இதற்காக எமக்கான பரிகாரம்தான் என்ன?

இந்தக் குழந்தைகள் அனைத்தையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதிலும், இனப்படுகொலைகளை செய்தது தொடர்பிலும் தற்போது இருக்கின்ற அரசுத்தலைமையே நேரடியாக பங்கேற்று செயற்படுத்தியிருந்தது. எனவே கறை படிந்த கைகளிடம் நீதி கோர முடியாது என்பதனால் ஐ.நா.மன்றத்திடமும் உலக சமுதாயத்திடமும் எமது குழந்தைகளை மீட்டுத்தருமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கின்றோம்.

எத்தனையோ தமிழ்க் குழந்தைகள் வலிந்து காணாமல் செய்யப்பட்டிருப்பினும் வலிந்து காணாமல் செய்யப்பட்ட இருபத்தொன்பது (29) தமிழ்க் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள் — வலிந்து காணாமல் செய்யப்பட்ட நேரத்தில் இக்குழந்தைகளின் படம் பெயர் வயது ஆகியவை உள்ளிட்ட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.https://drive.google.com/file/d/1DZoSpmQZFqnZJuSSerAJ5pgyCz_tIgpJ/view

எங்கள் குழந்தைகள் எங்கே என்று கண்டுபிடிக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version