நியுசிலாந்திற்கு அகதி தஞ்சம் கோரி சென்ற இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

2019 இல் நியுசிலாந்திற்கு ஆபத்தான   கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் காணாமல்போயிருக்கலாம் என நியுசிலாந்தின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நியுசிலாந்தை சென்றடைவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்த அந்த நாட்டு அரசாங்கத்தின் ஆவணங்களில் இலங்கையை சேர்ந்த  248 பேருடன் காணப்பட்ட மீன்பிடிப்படகை மீண்டும் காணவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

2019  ஜனவரி 12ம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது. அந்த படகு அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலாம் என நியுசிலாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதன்பின்னர் அந்த படகிலிருந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என நியுசிலாந்தின் ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளின்போது கைதுசெய்யப்பட்ட பிரபுதண்டபாணி என்ற நபர் குறிப்பிட்ட படகு நியுசிலாந்திற்கே சென்று கொண்டிருந்தது என இந்திய காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

பெருமளவு எண்ணிக்கையில் நியுசிலாந்திற்குள் நுழைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த ஆவணங்களில் – தமிழர்கள் கேரளாவிலிருந்து  நியுசிலாந்து அல்லது அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சியில் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நியுசிலாந்திற்கு செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் படகு குறித்து டைம்ஸ்ஒவ் இந்தியாவில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்திய தலைநகர் டெல்லியின் மதங்கீர் காலணியில் தங்கியிருந்த இலங்கை தமிழ் அகதிகளே குறித்த படகில் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை உடன்படிக்கை காரணமாக இந்த கொலனி உருவானது இந்த அகதிகள் மிகமோசமான நிலையில் வாழ்ந்தார்கள் என   தெரிவிக்கப்படுகின்றது.

தங்கள் பயணத்தை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடிப்பதை தவிர்ப்பதற்காக 25 நாட்கள் நீடித்த படகு பயணத்தின்போது அவர்கள் ஜிபிஎஸ் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.

இந்த படகு நீரில் மூழ்கியிருக்கவேண்டும் அல்லது இலங்கை அதிகாரிகள் இவர்களை கைதுசெய்திருக்கவேண்டும் இதனால் அவர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.