வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் அழிப்பு -மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு,ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்,

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம்.  மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றோம் என்றனர்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை காலை நெடுங்கேணி காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்டசெயலகம் வரை சென்றடையவுள்ளது.

எனவே, பொதுஅமைப்புக்கள்,  அரசியல் கட்சிகள், சமயப்பெரியோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும் பேதங்களை  மறந்து குறித்த பேரணியில்,  கலந்து கொண்டு மத ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையினை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.