அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், விவசாயத்துக்கு தேவையான உரத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1,000 ரூபா வழங்கப்படாமல் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாகங்களின் அடாவடி முடிவுக்கு வர வேண்டும் எனவும் போராட்டத்தின்போது குரல் எழுப்பட்டது.