பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர் அஹ்னப்பை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம். தமிழ் இளைஞர்கள் மட்டுமின்றி பல முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மன்னாரில் கடந்த 2017ம் ஆண்டு மதுரங்கு தனியார் பாடசாலையில் பணியாற்றி வந்த அஹ்னப் (27) என்ற தமிழ் ஆசிரியர் ‘நவரசம்’ எனும் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டார்.
இந்த கவிதை நூலில் எழுதப்பட்ட “ உருவாக்கு” என்ற கவிதை மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் 2020 மே மாதம் 16 ம் திகதி கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கைது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம், இலங்கை நாடாளுமன்றம் உட்பட பல இடங்களில் பேசப்பட்டாலும் இதுவரை நடைமுறையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், தீவிரவாதத்திற்கு எதிராக இருந்த தனது மகனை காரணம் இன்றி கைது செய்துள்ளதாக அஹனாப்பின் பெற்றோர் குற்றம் சுமத்துவதோடு அவரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.