Home செய்திகள் ஊடகவியலாளரும் கவிஞருமான டிவனியாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

ஊடகவியலாளரும் கவிஞருமான டிவனியாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

டிவனியாவை விடுதலை செய்யுமாறு

ஊடகவியலாளரும் கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டிவனியாவை விடுதலை செய்யுமாறு தெரிவித்து மனு கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம் குடும்பத்தார் மற்றம் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து மனுவை கையளித்தனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி டிவனியா மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றிய விமல் எனும் மற்றுமொரு சந்தேக நபரும்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிரவாத கொள்கைகளை பரப்பும் வகையில் செயற்படுகின்ற இணையத்தளம் மற்றும் யூடியூப் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய ‘குறித்த யூடியூப் மற்றும் இணையத்தளம் என்பவற்றை நிர்வகித்த அலுவலகம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையின் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை பரப்பும் வகையிலான செய்திகள் இவற்றினூடாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், குறித்த அலுவலகத்திலிருந்த 35 வயதுடைய பெண் ஒருவரும் , 36 வயதுடைய ஆண் ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்போது 5 மடிக்கணனிகள் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும்  காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் டிவனியாவை விடுதலை செய்யக்கோரி இன்று அவரது தாயார் மற்றும் மாற்றுவலுவுள்ள பிள்ளை ஆகியுார் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்களிற்கு ஆதரவாக கிராம மக்கள், மக்கள் பிரிதிநிதிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

குறித்த விடுதலையை வலியுறுத்தி 1500 கையோப்பங்கள், கிராம மட்ட அமைப்புக்களின் ஒப்பங்களுடன் இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு மனு கையளிக்கப்பட்டது.

இம்மாத இறுதிக்குள் டிவனியாவை விடுதலை செய்யாவிடின் முதலாம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக டிவனியாவின் தாயார் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா ஆகியோர் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version