கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தாமதம் 

கடன்மறுசீரமைப்பு தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்ததைகள் வித்தியாசமான தரவுகள் குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளன என தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் தங்களிற்கு இதுவரை வழங்கப்பட்ட ஆவணங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என தெரிவித்துள்ள இந்தியா பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிற்காக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்  சாகல ரட்நாயக்க கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டவேளை இந்தியா இது குறித்து சுட்டிக்காட்டியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கறிந்த வட்டாரங்கள்  இந்த விடயங்கள் மேலும் தாமதமாகின்றன என தெரிவித்துள்ளன.

இந்த விடயங்கள் மேலும் தாமதமானால் அது வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சிகளிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா செப்டம்பர் 16 மற்றும் ஒக்டோபர் 25 ம் திகதிகளில்  பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள்இந்தியாவிற்கு பொருத்தமான தரவுகள் தொடர்பாகவே முக்கிய கேள்விகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளன.

இலங்கையின் அணுகுமுறையை நாங்கள் தெளிவாக அறிந்துகொள்ள விரும்புகின்றோம்,சில விடயங்கள் இரகசியமானவை என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் இந்தியா சில விசேடமான தீர்மானங்களை எடுப்பதற்காகவே இந்த தகவல்களை கோருகின்றோம் என தெரிவித்துள்ளன.