அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் விளக்கம்

இலங்கையில் ஸ்திரமான சூழ்நிலை உருவாகி வருகின்ற போதிலும், போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால்  காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்துவர் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தல் மற்றும் சட்டவிரோத போராட்டங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. நீண்ட காலமாக நிலவிவரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட விடயங்கள் இவை.

கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டது அரசாங்க அதிகாரிகள் அங்கு தமது கடமைகளைச் செய்யமுடியாது போனது. இதுபோன்ற முக்கிய முடிவெடுக்கும் இடங்கள் தடைபட்டால், அத்தகைய இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.