திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தவும்-காரைதீவு பிரதேச சபையில் தீர்மானம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை சதித் திட்டங்களிலிருந்து பாதுகாத்து,புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு காரைதீவு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையின் விஷேட அமர்வு நேற்று (25) செவ்வாய்க்கிழமை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், இடம்பெற்றபோதே, இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையை சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்மொழிந்து உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, நாட்டின் மிகத்தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக, திருகோணமலை திருக்கோணேஷ்வரர் ஆலயம் விளங்குகிறது.இது, சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலமாகும்.

இந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில், சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டு,இடம்பெறும் செயற்பாடுகள் இந்துக்களின் மனங்களை புண்படுத்தியிருக்கிறது.

தொல்பொருள் திணைக்களம், ஆலய விடயத்தில் தலையிடுவதானால், நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டமிருக்கும். இந்த பின்புலத்தை நோக்கினால், திருகோணேஸ்வரர் ஆலயத்தை உள்ளடக்கியவாறு உல்லாசத்துறை அபிவிருத்தி எனும் பெயரில் ஆலயத்தை விழுங்கும் செயற்பாடு உள்ளதாகவே சந்தேகிக்கத் தோணுகிறது.

உல்லாசத்துறை அபிவிருத்திக்கு பல்வேறு இடங்கள் இருக்கின்றபோது, கோணேஸ்வரர் ஆலயப்பகுதியை தெரிவுசெய்ய வேண்டியதன் அவசியமென்ன? எனவே அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்றார். பிரேரணையை, சபை உறுப்பினர் த.மோகனதாஸ் வழிமொழிந்தார்.

பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக உரையாற்றி வாக்களித்தனர். இதனால், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டது தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்டவர் களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தவிசாளர் கூறினார்.