அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வந்த இலங்கைத் தமிழ் அகதி உயிரிழப்பு

இலங்கைத் தமிழ் அகதி உயிரிழப்பு

இலங்கைத் தமிழ் அகதி உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் 35 வயது தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

மெல்பன் Thomastown-னைச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்பனில் வாழ்ந்து வந்ததாகவும், உற்பத்தி துறையில் பணிபுரிந்த இவர் கோவிட் பரவலையடுத்து வேலையை இழந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, இவர் உயிரிழந்திருக்கலாம் என அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்து வருவதாகவும் அரன் மயில்வாகனம் கூறியுள்ளார்.