மொக்கா புயல்- மியான்மரின் துறைமுக நகரம் கடும் பாதிப்பு-4 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்வு

மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் புயலினால் நாட்டின் தகவல் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் ‘மொக்கா’ நேற்று (மே 14) தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதிதீவிரப் புயலாகக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.

மொக்கா புயலினால் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடும் தேசத்தை எதிர்கொண்டுள்ளன. இதில் மியான்மரே மொக்கா புயலினால் நேரடி பாதிப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து மியன்மருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் பாலகிருஷ்ணன் கூறும்போது, “ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளால் மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கியுள்ள ஒரு நாட்டில் இதுபோன்ற அதிதீவிர புயல் தாக்குவது என்பது ஒரு கொடுங்கனவு போன்றதே. இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

மொக்கா புயலை ஒட்டி வங்கதேசம் மற்றும் மியான்மரில் 4 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்ந்தனர்.

மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் இந்த மொக்கா புயலினால் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொக்கா புயலில் அகதிகள் முகாம்கள் குறைந்த அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளன.