இலங்கை போன்ற நாடுகள் நெருக்கடியைக் கையாள உதவவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

கடன் வழங்குனர் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதும், அந்நாடுகள் தற்போதைய நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு உதவுவதும் இன்றியமையாததாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைத்திட்டத்தயாரிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் மார்க்ப்ளனகென் வலியுறுத்தியுள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடித்தகால நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முதற்கட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் எட்டப்பட்டது. அதனையடுத்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கடந்த ஆண்டு இறுதியில் கிட்டுமென அரசாங்கம் எதிர்வுகூறியிருந்தது.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ள கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படாத நிலையில், இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை போன்ற நாடுகள் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்தும் கடன்வழங்குனர்கள் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைத்திட்டத்தயாரிப்பு மற்றும் மீளாய்வுப்பிரிவின் பணிப்பாளர் மார்க் ப்ளனகென், உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகள் இதனையொத்த நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதனை அவதானிக்கமுடிவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அந்நாடுகள் அவை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து உரிய காலப்பகுதியில் மீட்டெடுக்கப்படாவிட்டால், அதன்விளைவாக உலகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் மார்க் ப்ளனகென் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

அதுமாத்திரமன்றி கடன்வழங்குனர் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதும், அந்நாடுகள் தற்போதைய நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு உதவுவதும் இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.