இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது தினமும் சுமார் 60 வரை நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 16,535 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் . ஜூலை 22 அன்று மாத்திரம் 68 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மரணமடைந்த நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததாலும், வைத்தியசாலைகளில் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பைசர் தடுப்பூசியின் நான்காவது டோஸ் (இரண்டாவது பூஸ்டர் டோஸ்) ஆகஸ்ட் 14 காலாவதியாகும் திகதிக்கு முன்னதாகப் பெறுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சுமார் எட்டு மில்லியன் மக்கள் முதல் பூஸ்டர் டோஸ் (மூன்றாவது தடுப்பூசி) பெற்றிருந்தாலும், 13,959 பேர் மட்டுமே இரண்டாவது பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது .

மக்கள் சமூக இடைவெளியை பேணாததாலும், நெரிசலான பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியாததாலும், வரிசையில் நிற்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் தற்றலாற் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.