கிழக்கு மாகாணத்தில் 343 மரணம் 14739 பேருக்கு கொரோனா

IMG 20210707 WA0005 1 கிழக்கு மாகாணத்தில் 343 மரணம் 14739 பேருக்கு கொரோனா

கிழக்கில் அடுத்த கட்டமாக 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசினால் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் 202,511 தடுப்பூசிகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக செலுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்த அதே வேளை இன்று அல்லது நாளை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 100,000 தடுப்பூசிகளும் அதற்கு மேலதிகமாக கல்முனை பிராந்தியத்திற்கு 140,000 தடுப்பூசிகளும் கிடைக்கப் பெறும் என எதிர் பார்ப்பதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் இவை அனைத்தும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணி புரியும் முன்னிலை உத்தியோகத்தர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

COVID – 19 3வது அலையின் பின்னராக இது வரை கிழக்கு மாகாணத்தில் 14,739க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் 343 மரணங்களும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார பணிமனைக்குபட்ட பகுதியில் 33 நோயாளர்களும் ஒரு மரணமும் சம்பவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொழிற் சாலையொன்றில் கடமையாற்றி வந்த 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் 6368 நோயாளர்களும் 89 மரணங்களும் இடம் பெற்றுள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 924 தோற்றாளர்களும்  144 மரணங்களும் இடம் பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021