Home செய்திகள் “தேர்தல் கால வன்முறை பாரபட்சங்களை கட்டுப்படுத்துதல் “2009ன் பின்னான தேர்தல்களின் கண்ணோட்டம்” யாழ்.தர்மினி பத்மநாதன்

“தேர்தல் கால வன்முறை பாரபட்சங்களை கட்டுப்படுத்துதல் “2009ன் பின்னான தேர்தல்களின் கண்ணோட்டம்” யாழ்.தர்மினி பத்மநாதன்

தேர்தல் கால வன்முறை

இலங்கை 1972 காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி சபைத்தேர்தல், மா நகரசபைத்தேர்தல் என்பனவற்றை  நடாத்தி வந்துள்ளது.

வடக்குக் கிழக்கை பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப்போராட்டம் இடம் பெற்று வந்த பிரதேசங்களில் தேர்தலை நடாத்துவதில் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆயினும் 2004ல் ஏற்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின் பாராளுமன்ற தேர்தல், மா நகரசபை தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை வடக்கு கிழக்கில் செயற்படுத்த முடிந்த நிலையில், இன்று வரை அதனை தொடரவும் முடிகின்றது. இங்கு  2009 ன் பின் யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் தேர்தல் கால வன்முறை பாரபட்சங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சட்டங்களும் நடைமுறைகளும் எவ்வாறு உள்ளன என்பதை ஆராய்வதாகவே இப் பகுதி உள்ளது.

தேர்தல்களுக்கு என சரியான நாட்காட்டி இல்லாத போதும் தேர்தல் திணைக்களம் தான் தோன்றித்தனமாக தேர்தல் நாளை அறிவிப்பு செய்து வர்த்தமானி வெளியிடுகின்றது. அந்தக்காலப்பகுதியில் ஒவ்வொரு கட்சிகளும் தமக்கான வேட்பாளர்களை தேடிக்கொள்வதில் தீவிரமாக செயற்படுவார்கள். சிலர் நிரந்தர வேட்பாளர்களாகவே தம்மை  நிலை நிறுத்திக் கொள்கின்ற போதும், சிலர் மழைக்கு முளைத்த காளானாக உருப்பெறுவார்கள்.  “இவ்வேளையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களின் போது வன்முறை, முரண்பாடு என்பன ஆரம்பிக்கத் தொடங்குகின்றன. இவற்றை சில நேரம் கட்சிகளே கண்டும் காணாமலும் இருப்பதுடன், கட்சிகளுக்குள்ளும் இடம் பெற்று வருகின்றன. மாற்றுக் கட்சிகளுடனான போட்டிகள் ஊடாகவும் இடம் பெற்று வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவை உரிய தரப்புகளில் முறையிட்ட போதும் தீர்வு கிடைப்பதில்லை. பயன் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. இவைகூட ஒருவகையில் கட்சிகளுக்கிடையே செல்வாக்கு செலுத்தும் வன்முறை, பாரபட்சங்கள் என்றே சுட்டிக்காட்டுகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தேர்தல் கால வன்முறை பாரபட்சங்கள் என்பன வேட்பாளர்களை தெரிவு செய்வதில் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த 2020 பாராளுமன்ற தேர்தல் பெரும் உதாரணமாகக் கொள்ளமுடியும்.இங்கு பாரபட்சம் எனக்குறிப்பிடப்படுதலின் பொருளானது புறக்கணித்தல், அவதூறு செய்தல், வெறுப்புப் பேச்சு, பக்கச் சார்பாக செயற்படல், சம மதிப்பு அற்ற தன்மை, போன்றவற்றினூடாக பாகுபாட்டிற்கு வழி வகுத்தல்” எனப் பொருள் கொள்க. அந்த வகையில், மேற்குறிப்பிட்டது போன்று கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் வடக்கின் பெருங்கட்சியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் கட்சியின் மகளிர் அணியின் தலைவியாக செயற்பட்டு வந்த திருமதி விமலேஸ்வரி சிறிகாந்தன் வேட்பாளராக போட்டியிட முடியாது என்றும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அம்பிகா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா ஆகியோர் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் ஊடகங்கள் ஊடாக பரபரப்பார்க்கப்பட்டதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

கட்சிமீதும், கட்சிசார் செயற்பாடுகள் மீதும் ஆதரவாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இச்செயற்பாடு கேள்விக்குட்படுத்தியது. தவிர, மகளீர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் குறிப்பிடுகையில் “2018 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை ஒவ்வொரு அமைப்புகள், சங்கம் ஊடாக தெரிவுசெய்து பெயர்ப்பட்டியல் இட்டு, TNA தலைமையிடம் ஒப்படைத்தோம். கடைசிவரை காத்திருக்க வைத்தனரே தவிர நாம் பட்டியலிட்டு கொடுத்த எந்த பெண்களையும் அவர்கள் உள்வாங்கவில்லை” என கருத்துரைக்கும் போது தெரிவித்தாக அறியக்கிடைக்கின்றது. பெண்களுக்கான அங்கீகாரம், சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனந்தி சசிதரனால் பெண்களுக்கான கட்சி உருவாக்கப்பட்ட போதும், அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய கட்சியில் இணைந்தே வேட்பாளராகி விக்னேஸ்வரனை பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கும் சேவையினை புரிந்துள்ளார். வடக்கில் உள்ள ஏனைய ஆதிக்க கட்சிகளான EPDF கட்சியோ இதுவரை ஒரு பெண்ணையும் பாராளுமன்றம் அனுப்பவில்லை. திருமதி மகேஸ்வரி பற்குணம் முன்னாள் முதல்வராக பண்புரியும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

குறித்த. முறைமைகள் தேர்தல் கால வன்முறைகள் பாரபட்சங்கள் என்பன நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் இடம்பெற்று வந்துள்ளன என்பதனை ஆதாரப்படுத்துவதாக அமைந்துள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாக போட்டியிட்ட பலரை அடிப்படையில் கல்வித்தரத்தில் மிகப்பிந்தங்கியவர்களாகவும், குடும்ப பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகவும் குறிப்பாக அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஆளுமை அற்றவர்களாகவும் பார்த்துப்பார்த்து தேடியதாகவும் அறிய முடிகின்றது. ஏனெனில், கோப்பாயை சேர்ந்த ஓர் பெண்மணி (60 வயது) அவரை எந்த நியமங்களுமின்றி வேட்பாளராக்கிக் கொண்ட குறித்த கட்சியினர் “நீங்கள் ஒன்றும் செய்யத்தேவையில்லை. எங்களோட வந்து எங்களுக்காக பிரச்சாரம் செய்தால் போதும்” எனக் கூறியுள்ளனர். அதே போன்று வவுனியா மாவட்டத்தில் வீதியில் கச்சான் வியாபாரம் செய்யும் ஓர் பெண்மணியை வேட்பாளராக இணைத்துள்ளனர், இது குறித்து வேறு ஒரு யுவதி கூறுகையில்   “இளம் வயது பெண்களை கட்சிகளில் இணைத்துக் கொண்டால் அவர்களை சமாளிப்பது கஸ்டம். வயசானவர்கள் என்றால் நாம் சொல்வதை மட்டும் கேட்டு தலையாட்டினால் போதும், அதைவிட்டு பொம்பளையளுக்கு தேவையில்லாமல் விலா வாரியாக நாம் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். பின்பு நாம் தான் சுதந்திரமாக செயற்படமுடியாது போகும்” என ஓர் கட்சியினர் குறிப்பிட்டதாக கூறினார்.

அரசியல் என்பது ஆணுக்குரியது. ஆண் தலைமைக்குரியது. பெண்கள் வெறும் பார்வையாளர்களாகவும், ஆண்களுக்கு வாக்குசேகரிக்கும் சேர்ப்பாளனாகவும் இருந்தால் போதும் என்ற மன நிலை உள்ளூர் வட்டங்களிலும் அதிகம் உள்ளன. அதிலும் அரசியல் பின்புலம் எதுவுமற்ற நிலையில் வரும் பெண்கள் மிக கீழ்த்தரமாக மட்டந்தட்டுவதும், புறக்கணிப்பதும், அவர்களை தமது அலுவல வேலைக்காகவும் அடிமட்ட ஒழுங்கு படுத்தல் வேலைக்காகவும் நியமிக்கின்றனரே தவிர அவர்களும் பங்கு வகிக்க வேண்டிய முக்கியமானவர்கள் என்பதை உணர்வதில்லை. வடக்கை பொறுத்தவரை பரம்பரை அரசியல் வழிவரும் வேட்பாளர்களோ, மிகப் பணக்கார வர்க்கத்தில் இருந்து வந்த வேட்பாளர்களோ போட்டியிட்டதாக அறியக் கிடைக்கவில்லை.

மாறாக பெண்களுக்கான சமூக அரங்கச் செயற்பாட்டாளராக சமூகத்தில் செயற்பட்டு வந்த திருமதி பத்மினி சிதம்பர நாதன் பெண்களுக்கான அந்தஸ்த்தின் பின்னணியிலும், திருமதி விஜியகலா மகேஸ்வரன், கணவனுக்கு பின்னரான பதவிவழியான அனுதாப வாக்கிலும் தெரிவானார்கள். சசிகலா இரவிராஜ் கணவனின் இழப்பின் பின்னான அனுதப வாக்கினை பெற்றுக்கொள்ளும் வகையில் 2020ல் பாராளுமன்ற தேர்தலின் வேட்பாளரான போதும் அவருக்கான  சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளி வந்த நிலையில் அவர் தோல்வியுற்றார். அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படும் ம. சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமையும் ஒரு வகையில் பாரபட்சமான நிலையாகவே பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஏனெனில் தேர்தல் பெறுவேறு அறிவிப்பு வெளியாக முன்பே யாழ் மத்திய கல்லூரிக்கு இரவு வேளை வருகை தந்த சுமந்திரன் தன்னிடம் எண்ணிலடங்கா பாதுகாப்பு படையினரையும் அழைத்து வந்திருந்தார். அத்துடன், வன்முறையில் ஈடுபட்ட, ஈடுபட முனைந்த எதிர்ப்பார்ப்பாட்டகாரர்மீது பாதுகாப்பு படையினரையும் ஏவிவிட்டு அவ்விடத்தை களேபரத்தை ஏற்படுத்தினாரே தவிர, அவரது படைகளையும் கட்டுப்படுத்த அவர் முனையவில்லை. அதே நேரம் சுமந்திரனால் தான் தனது வாக்கிற்கு பிரச்சனை இடம் பெற்றதாகவும், தானும் பிள்ளைகளும் தப்பியதே பெரிய விடயம் என்பது போன்றும் தனக்கு அநீதி நடந்து விட்டதாகவும், திருமதி ரவிராஜ் சசிகலா ஊடங்களுக்கு கருத்துத்தெரிவித்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் பெரும் குழப்பமடைந்த சசிகலா ரவிராஜ் தனது  பிரச்சனையை ஊடகங்களிற்கு வெளிப்படுத்த மறுத்து விட்டார். தனது புறக்கணிப்பு, தனக்கு இழைக்கப்பட்டது. அநீதி தான் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் வெவ்வேறு பெண்கள் அமைப்புக்கள் ஆதரவு கொடுக்க முனைந்த போதும், அதனையும் அவர் நிராகரித்துள்ளதுடன், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் முன்வரவில்லை.

ஓர் பெண், ஆளுமையானவளாக செயற்பட வேண்டுமாயின் அதற்கு கட்சிகள் முக்கியத்துவம் கொடுப்பதே அந்த கட்சிகளினது தலைமைத்துவம் தான். ஆனால் வெறும் பேச்சளவில் கட்சியின் இடைவெளி நிரப்ப பெண்களை பாவிப்பது ஆணாதிக்கத்தின் கீழ்த்தர மன நிலையே. அத்துடன், இலங்கையில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பெண் தலைமைத்துவங்கள் இருந்தபோதும், அவர்களால் பெண்களுக்கான எந்த காரியங்களையும் முன்னெடுக்க முடியவில்லை. அவர்களது ஆட்சிக்காலத்தில் பெரும் நெருக்கடி நிலையில் நாடு இருந்தது மட்டுமின்றி பெண்களுக்கான பாதுகாப்பு, சுதந்திரம் என்பதும் கேள்வியாகவே இருந்தது.

கிரிஷாந்தி உட்பட பல பெண்களின் பாலியல் வன்முறைக்கு வித்திட்டகாலமாகக் கூட அம்மையார் சந்திரிக்கா பண்டார நாயக்கா ஜனாதிபதியாக இருந்த காலம். அவர்களின் இனவாதம் என்பதற்கு அப்பால ஓர் நாட்டின் பெண்ணாக, பெண்களின் சுதந்திரம், அடிப்படை உரிமைகள், தொழில்துறை, விடுதலை என எந்த செயற்பாடுகளிற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. முன்னிலைப் படுத்தவில்லை. பெண்களுக்கான வலுப்பெற்ற சட்டங்களை கூட இரு பெண் ஆளுமைகளால் உருவாக்கவும், நெறிப்படுத்தவும் முடியவில்லை. இவர்கள் நாட்டிற்கான பெரும் சந்தர்ப்பங்களை புறந்தள்ளி உள்ளனர்.

இல்லையேல் பெண்கள் மீதான பாரபட்சம், கற்பழிப்பு, வன்முறை, புறக்கணிப்பு, வல்லுறவு என்கின்ற பதங்களுக்கு கூட வலுவற்றுப்போய் இருக்கும். இந்த நிலையிலும், பெண்கள் தமக்கான உரிமைகளை தாமே பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும், பெண்களின் பிரச்சனைகளை தேவைகளை விருப்புகளை ஆழமாகப் புரியக்கூடியவள் பெண் என்ற ரீதியில் பெண்களுக்காக பெண்ணே பாராளுமன்றம் மற்றும் ஏனைய களங்களிலும், பெண்கள் பிரதிநிதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும் என்பதனை உணர்கின்றனர். உணரத்தொடங்கி உள்ளனர். அதற்காக பல பெண்கள் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பக்க பலமாக உறுதுணையாக செயற்படுகின்றபோதும், வடபகுதியின் பண்பாட்டியல் சார் கூறுகளை காரணம் காட்டி, மூடக்கொள்கைகளை, பிற்போக்குத்தனங்களை காரணம் காட்டி பெண்களை அரசியலில் ஈடுபட அனுமதிக்காத தன்மை/ நிலைமைகளும் ஏற்பட்டு வருகின்றன.

எழுத வாசிக்க தெரியாதவாவுக்கு எதுக்கு அரசியல்? புருசன் பிள்ளை என்று ஒழுங்கா குடும்பம் நடத்த வக்கில்லை அரசியல் கேக்குதோ?” போன்ற கதையாடல்கள் மட்டுமன்றி “அவர்களின் வீட்டு வாசலில் நின்று தகாத வார்த்தைகளை பிரயோகிப்பது, பிள்ளைகள் குறித்து அச்சுறுத்துவது, சமூக வலைத்தளங்களில் அநாகரீக முறையில் புகைப்படங்களுடன் சித்தரிப்பது” போன்ற விடயங்களால் கௌரவத்தினை பாதிக்கும் வகையில் செயற்படும் செயற்பாடுகள் பெண்களின் ஆளுமையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

கல்வி, பொருளாதாரம், குடும்ப தலைமைத்துவம், என பல்வேறுதுறைகளில் முன்னின்று செயற்படும் பெண்களின் சதவீதத்தில், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் வீதம் மட்டுமே குறைவாகவுள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படாத சந்தர்ப்பங்கள், முன்னிலைப்படுத்தாமை, புறக்கணிப்பு, அவதூறு, வெறுப்பு பேச்சு என்பனவற்றுடன் தேவை உணரப்படாமை, விழிப்புணர்வு இன்மை, பாதுகாப்பின்மை, நம்பிக்கையின்மை, கூட்டிணைவு இன்மை, தலைமைத்துவத்தினை ஏற்காமை, அதிகாரம், என்பனவும் அடங்கும். இது குறித்து சில பெண்கள் வேட்பாளர்களாக தம்மை அறிமுகம் செய்த காலப்பகுதியில் குறிப்பிடும்போது “வீடு வீடாக செய்கையில் காறித்துப்புகின்றனர், ஏளனம் செய்கின்றனர், போஸ்டர்களை கிழித்துப்போடுகின்றனர்.

சுவரில் ஒட்டிய போஸ்டர்களுக்கு ஒயில் பூசுகின்றனர். நோட்டீஸ் குடுத்தால் கசக்கி எறிகின்றனர். அதில் என்ன எழுதியுள்ளது என்றே பார்த்து வாசிக்காமல் அதெல்லாம் எங்களுக்கு தெரியும் என்று துரத்துகின்றனர். வீட்டு வாசல் போகமுன்பே கதவை பூட்டி விட்டு உட்செல்கின்றனர், அதே வேளை முகம் தெரிந்த/ தெரியாத பழக்கமுடைய /பழக்கமற்ற  ஆண் வேட்பாளருடன் வீடுகளிற்கு சென்றால் மலர்ந்த முகத்தோட வரவேற்று உங்களுக்கு தான் போடுவம், நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என்றெல்லாம் கதையாடி தேநீரும் கொடுத்து சந்தோசமாய் வழியனுப்புகின்றனர். எம் மக்களுக்கே முதலில் பெண்கள் மீதான பாரபட்சத்தினை பெண்களே ஏற்படுத்தாத செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆண்களுக்கு கொடுக்கும் நம்பிக்கையை பெண்களே பெண்களுக்கு கொடுக்கவும் தவறிவிடுகின்றனர். தவிர, பெண் வேட்பாளர்களுடன் பாலியல் ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தத் தயங்கவில்லை. வார்த்தைப்பிரயோகங்கள், இரட்டை அர்த்த வார்த்தைகள் மட்டுமின்றி, உடல்மொழிகளாலும் அ நாகரிகமாக நடந்து கொண்டுள்ளமையினையும் பெயர் குறிப்பிட விரும்பாத வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குழுவாக ஆட்பலமின்றி தனித்தனியாக வீடுகளுக்கு சென்ற பெண் ஒருவரை ஆண் ஒருவர் தனது ஆடைகளை களைந்து காட்டியதாகவும் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத்தெரிவிக்கையில்;  “எங்களைப் பொறுத்தவரையில் ஊடகங்களே மிக மோசமான உளவியல் வன்முறையினையும் பாரபட்சத்தினையும் எமக்கு ஏற்படுத்தி இருந்தது. 2009 யுத்த ஓய்வின் பின்னான தேர்தல்களில் நாம் ஊடக வன்முறைகளினால் மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளானோம். நாம் கருத்து வெளிப்படுத்தாத விடயங்களை அப்பட்டமாக பொய்யாக திரிவுபடுத்தி கூறியதும், மக்களை எம் பக்கம் சிந்திக்கவிடாமல் எம்மை மிக மோசமானவர்களாக சித்தரிக்கும் செயற்பாடுகளில் ஊடகங்கள் இயங்கின.

தேர்தலுக்கு முதல் நாள், வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலும், விடுதலைப்புலிகளின் அழிப்பு தொடர்பிலும் எனக்கு சம்பந்தம் உண்டு என த.தே.கூ எம்மை மிகப்பிழையான தரப்பாக மக்களுக்கு பறையடித்தனர். ஊடகங்கள் பெரும் எழுத்துகளில் அவற்றை வெளிப்படுத்தின. விளம்பரம் கூட பணம் கட்டி விளம்பரம் கொடுக்கு நிலையில் அவ்வாறு செய்தபோதும், முன்னணி நிலைப் பத்திரிக்கைகள் விளம்பரங்களையும் போடவில்லை. எமது செல்வாக்கை பிரிக்க வாக்கை பிரித்தனர். 2009 தொடக்கம் எமது இருப்பை, கொள்கையை மக்களுக்கு தெளிவூட்ட பெரும் பிரயத்தனப்பட்டோம். அதே மக்களிடம் மீண்டும் 2020ல் வெற்றிக்கொள்கைக்கான கட்சி நாம் என்பதை உறுதிப்படுத்தினோம். ஆயினும் கொலை அச்சுறுத்தல், பரவலாக பின் தொடர்தல் வெளிப்படையாக இருந்தது.

இரவுகளில் வெவ்வேறு இடங்களில் தங்கும் நிலை உருவானது. இந்த நிலையில் 2015-2020 தேர்தல் காலப்பகுதியில் தலைமைத்துவ தரப்பைவிட கட்சிசார்ந்து வேலைசெய்யும்  ஆண் பெண் உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்துவது, பல்வேறு செயற்பாடுகளுக்கும் அரசியல் சட்டங்களை காரணமாகக்கொண்டு எம்மை தடுத்து நிறுத்துவது போன்ற செயற்பாடுகளில் பொலிஸ் மற்றும் இனம் தெரியாத நபர்களினாலும் மிரட்டல் விடப்பட்டது. தேர்தல் ஆணையாளராக இருந்த இரட்ண ஜீவன் ஜூல் எமக்கு ஆதரவளிக்க வேண்டாம் இவர்கள் கள்ளர் என பகிரங்கமாக அறிவித்திருந்தார். அத்துடன் ஜனாதிபதித்தேர்தலை பகிஸ்கரிப்பவர்களைநிராகரியுங்கள் என்றும் எமக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

எங்களை எதிரியாகவும், மற்றவர்கள் எம்மை புறக்கணிக்க வேண்டும் என்று நடப்பது, பாரபட்சம் இல்லையா? எம் மீதான வன்முறைகள், பாரபட்சம் குறித்து முரண்பாடு செய்தோம். எந்தப் பலனும் கிடைக்கவில்லை.. எமக்கு அரசியல் கூட்டத்தின் போது ஸ்பீக்கர் பயன்படுத்த அனுமதி தரவில்லை, அறிவிக்க அனுமதி தரவில்லை. கூட்டத்தின் இறுதி நாளில் கொடுக்கும் அனுமதிகூட தரவில்லை. வாகனம், ஊர்திப் பவனி, சின்னம் காட்சிபடுத்துதல், மக்களுக்கான விழிப்புணர்வுக்கான அனுமதி, கட்சி டி.சேட் பாவனை. என யாவும் தடுத்தனர். ஆனால் யு.என்.பி அடையாளத்  தொப்பியுடன் பிரசாரம் இடம்பெற்றது. வாக்களிப்பு  தினம் அன்றும் பேனாவில் கட்சிக்காரரின் அடையாளம் தொப்பி, டி.சேர்ட் என அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் த.தே.கூ வேட்பாளரான ஆனோல்ட் பாசையூரில் ஊர்வலமாக பவணி போனார். அவரை யாரும் தடுக்கவில்லை.

என்னைப்பொறுத்த வரையில் கட்சி ரீதியாக பாகுபாடு பார்த்து எமது செயற்பாடுகளை தடுக்கும் நடவடிக்கைகளை உரிய பொறுப்பதிகாரிகளும், இனம் தெரியாத நபர்களும் செய்து வருகின்றனர். ஊடகங்களும் அவ்வாறே பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றமையுடன் எமது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முட்டுக்கட்டையாகவும் உள்ளனர். தேர்தல் ஆணையாளர் இரட்ணஜீவன் கூட எம்மை புறந்தள்ளும், எம்மீது பாரபட்சம் காட்டும் வகையில் வெளிப்படையாக செயற்பட்டுள்ளமை ஏற்புடையதல்ல. கட்சிகள் ஒவ்வொன்றிற்குமான பண ஒதுக்கீட்டு செலவை மட்டுப்படுத்தல் வேண்டும். ஏனெனில் பணம் மற்றும் ஊடக பலம் என்பவற்றினூடாக எம் உழைப்பை, அர்ப்பணிப்பை முடக்கும் சக்திகளுக்கு எதிரான பயன்மிக்க சட்டங்களை முன்வைக்கவேண்டும்” என்றார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் கௌசல்யா சிவா குறிப்பிடுகையில், “நான் மக்களுக்காக சேவை செய்ய விரும்பினேன். எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. ஆனால் சில சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதாயின் அரசியலில் ஈடுபடுவது அவசியம் என்றும் உணர்ந்தேன். பல நம்பிக்கையுடன் TNA கட்சியில் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். கிடைக்கவில்லை. நானாகவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு உள்ளூராட்சி சபைக்கு போட்டியிட்டேன்.நான் அரசியலுக்கு புதிசு. பெண் என்ற ரீதியில் பெரும் சவாலானது. வேட்பாளராக நிற்பதை பலரும் பெருதும் விரும்பவில்லை என்ன செய்யப் போறா? என்ன தருவீங்க? என்ற கேள்விகளோடு தொடர்ந்தேன்.

மறைமுக அச்சுறுத்தல் வந்தது. பிள்ளைகளை பாதிக்கும் வகையில் அவை அமைந்திருந்தது, மனரீதியாக தாக்கத்தை தந்தது. பிள்ளைகளின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை சாட்டை காட்டியது இது ஒரு வகை அச்சுறுத்தல், மிரட்டல் என்றே உணர முடிந்தது. முகம் தெரியாத சிலர் பேக் ஐடி ஊடாக முக நூலில் அவதூறு செய்தனர். அவர்களுக்கு நான் முன் மாதிரியாக செயற்படுவது ஏற்க முடியவில்லை. வெற்றி பெற்ற பின்பும், சபை அமர்வின்போது என்னுடன் வாதப்பிரதிவாதம் செய்தனர். எனது மகனார் மா நகர சபையில் வேலையில் இணைந்து கொண்டார். அதற்கும் எனது பொறுப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்தும் வீணான அவதூறுப் படுத்தலை மேற்கொண்டனர்.இதுமட்டுமன்றி வேறு பல பேக் ஐடி யிலிருந்து அவதூறுப்படுத்தும் வகையில் செயற்பட்டனர். இவர்கள் வெவ்வேறு கட்சிசார் ஆண்களாகவே உள்ளனர். அவர்களின் எண்ணப்படி மனரீதியாக தாக்கும் வேலையைச் செய்கின்றனர். தவிர கட்சியிடையே ஏற்பட்ட சில நெருக்கடி மாற்றம் காரணமாக நான் அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட போதும், எமது செயற்பாட்டு பதவிக்காலம் இருப்பதனால் இயங்கிக்கொண்டே இருக்கின்றேன்.ஆயினும், கட்சி என்ற ரீதியில் நான் பல்வேறு செயற்பாடுகளிற்கும் பங்களித்து வந்துள்ளேன். என்னாலான சுய முடிவுகளின் படி இயங்கவும் கட்சித்தலைமை போதிய சந்தர்ப்பத்தினையும் வழங்கி இருந்தது.

இருந்தபோதிலும் ஏதோ ஓர் வகையில், எங்கோ ஓர் மூலையில் என்னை புறக்கணிப்பதனையும் என்னால் உணரமுடிந்தது. என்னுடைய பங்களிப்பு உடைய நிகழ்வுகள் செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டதுடன், என் பங்களிப்புடனான நிகழ்வுகளின் போதான புகைப்படங்கள் என்பனவும் கட்சியின் சமூக வலைத் தளங்களில் பதிவற்ற தன்மையினை அடையாளம் காணவும் முடிந்தது.இவையும் ஒரு வகையில் என்னை முன்னிலைப்படுத்தாத தன்மையினையே உணர்கின்றேன். “ நீபோய் என்ன பயன்?” எனக்கேட்ட எமது சமூகத்திற்கு பல்வேறு வழியில் சபையூடாக திட்டங்களை முன்வைத்து செயற்பட முடிந்த போதிலும் பெண் என்ற ரீதியில் தட்டிக்கழிப்பு, அக்கறையீனம், முன்னிலைப்படுத்தாத தன்மை, புறக்கணிப்பு, ஆகிய சவால்களை வெல்வதன் ஊடாகவே செயற்பட முடிகிறது. பெண்கள் மீதான ஒடுக்குதல், பாரபட்சங்களை பெண்கள்தான் உடைத்தெறிய வேண்டும்.” என்றார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரங்க சமூக செயற்பாட்டாளருமான பத்மினி சிதம்பர நாதன் குறிப்பிடுகையில் 2004, 2010, 2015 ஆகிய தேர்தல்களில் பங்குபற்றியுள்ளேன்.  2004 தேர்தல் மிகவும் சவால் மிக்கது. எனக்கு அப்போது புதிய அனுபவம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகவே பங்குபற்றினேன். பெண் வேட்பாளர் அதுவும் சமூகத்தில் பெண்களுக்கான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன், பெண்களின் பிரதி நிதியாக பங்குபற்ற வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் எனது பங்கு பற்றுதல் இருந்தது.ஆனால் தேர்தல் காலத்தில் எல்லா இடமும் பெரிய கூட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும்.

கூட்டம் இடம்பெறும் நேரமும் சகலருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும் சில வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் தமது கூட்டங்களுக்கான பேச்சாளர்களாக திட்டமிடப்பட்டு இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வந்து தமக்கு வேறு கூட்டம் இருப்பதாக கூறி, குறித்த நேரத்துக்குமுன் போயிருக்கும் எம்மை இறுதிப்பேச்சாளராக்கி விட்டு, தாம் முன்னுக்கு பேசிவிட்டு போவதை அவதானிக்க முடிந்தது. ஆரம்பத்தில் இந்த தந்திரம் எனக்கு புரியவில்லை. எமக்கும் பல கூட்டம் இருந்தது. ஆனால் அழைக்கும் இடங்களுக்கு மதிப்பு கொடுக்க  வேண்டும், என்ற ரீதியில் கட்சியாயினும் சரி, பொது வெளியாயினும் சரி எமது உரிமையை சண்டையிட்டு தான் பெறவேண்டி இருந்தது. இதெல்லாம் பெண் என்ற ரீதியிலான பாரபட்சம் ஒடுக்குதல் சந்தர்ப்பங்கள் தான்,ஆயினும், நான் பெண்கள் சார்ந்து செயற்பட்டுவரும் ஒரு செயலாளி. எம்மைச் சுற்றி பெரும் பெண்கள் அணி இருந்தது. அவர்களின் பலம் இருந்தது. எனது அரசியல் சமூக செயற்பாடுகள் யாவற்றினையும் பெண்கள் அணியே தலைமை தாங்கி நின்றனர். எமக்கான அரசியல் கூட்டங்களை அவர்களே சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தினார்கள். எமது உரிமைகளை நாமே உருவாக்கும் வகையில் செயற்பட்டனர். அதன் விளைவாக 2004ல் பெரும் வெற்றியை யாழ் மாவட்டத்தில் பெற முடிந்தது.

தேர்தல் வெற்றியின் பின் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் பாராளுமன்றத்திலும் சரி, கட்சியிலும் சரி, வெளிக்கூட்டங்களிலும் சரி கருத்துக்கூற முற்பட்டால், அல்லது கலந்தாலோசிக்க முற்பட்டால் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு வந்தது. “உங்களுக்கு அனுபவம் இல்லை. இப்போ நாம் கதைப்பவற்றை மட்டும் நீங்கள் அவதானித்தால் போதும். அரசியல் பற்றி நீங்கள் நிறைய படிக்க வேண்டும்,”என எமது கருத்துக்களை கேட்காமல் மட்டந்தட்டி இடம் கொடுக்காமல் இருந்தனர். அதன் போதும் வாதாட்டம் செய்துதான் எமது கருத்துக்களை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கட்சியில் இருந்தது.

அதே போன்று, 2004 தேர்தலின்போது (2004) வாக்கு எண்ணும் முகவர்களாக வேட்பாளர்கள் தமக்குரியவர்களை நியமிக்க வேண்டும். நாம் எமது பெண்கள் அணியினரை நியமித்த போது “அவர்கள் பெண்கள், இரவிரவாக நின்று சமாளிக்க மாட்டார்கள், களைத்துவிடுவார்கள்,” அந்த பொறுப்பை எம்மிடம் விடுங்கள் என்றனர். நான் அதனையும் பொருட்படுத்தாது விவாதம் செய்தே எனக்குரியவர்களாக பெண்கள் அணியினரை நியமித்தேன். இதெல்லாம் பெண்கள் மீதான ஒடுக்குதல் பாரபட்சமாகவே கருதமுடியும். ஏனெனில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இறுதி பெறுபேறு வரும் வரை எமது பெண்கள் அணியினர் மிக உற்சாகமாக செயற்பட்டனர். ஆனால் அவர்கள் கூறிய ஆண் செயலணியினை நாம் இடை நடுவோடு காணவில்லை.

2010,2015 தேர்தல்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளராகவே போட்டியிட்டேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜ கஜேந்திரன் பத்மினி சிதம்பரநாதன் ஆகிய மூவருமாகவே போட்டியிட்டோம். 2009ன் பின்னான இத்தேர்தல் மக்கள் பெரும் அவலத்தில் இருந்த காலம். அப்படி இருக்கும்போது தேர்தல் மிக சவாலானது. மக்களை யோசிக்க, சிந்திக்க விடாமல் ஊடகங்களும் அரசியல் நிலைமைகளும் துன்புறுத்திய காலம்.  மகிந்த ராஜபக்‌ஷாவின் ஆதரவாளர்கள் என்பது போன்ற நிலைப்பாட்டில் மக்கள் பெரும் கேள்விகளைக் கொண்டிருந்த தேர்தல் காலம் இது. இதனைத் தொடர்ந்து 2015 தேர்தலும் கொள்கைரீதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூகம் ஆகிய இரு தளங்களிலும் பாரிய சவாலை எதிர்கொண்டது. உண்மைக்கு புறம்பாக வெளிப்படுத்திய அத்தனை விடயங்களுக்கும் 2020 வரை பொறுமையாக பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்து 2020ல் வெற்றி பெற முடிந்தது. கட்சிபேதம், கட்சிகளின் பாரபட்சத்துடன் ஊடகங்களின் பாரபட்ச மன நிலையும் பெரும் சவாலாகவே அமைந்தது” என்றார்.

2015, 2018,2019,2020 ஆகிய காலங்களில் வடக்கின் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசகராக செயற்பட்ட ஹ ரிகரன் சாம்பசிவம் குறிப்பிடுகையில் “யாழின் தேர்தல் களத்தினை 2020 கற்பனை செய்ய முடியாது. இறுதியாக இடம் பெற்ற இப்பாராளுமன்ற தேர்தலில் பாராபட்சம் நடக்க எந்த வாய்ப்பும் இல்லை. வாக்குப்பெட்டி மாற்றும் அளவிற்கு எந்த சாத்தியமும் இல்லை. அந்தளவுக்கு கண்காணிப்பு குழுக்கள் இயங்கிக்கொண்டிருந்தன.4 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. cafe, CMEV, பவ்ரல், ரான்பரன்கி இவர்களின் மத்தியில் எந்த முறைகேடும் நிகழ வாய்ப்பில்லை.

இடையிட்ட கருத்து முன்வைப்புகளை தேர்தல் ஆணையாளர், அரச அதிபர் அறிவிக்காமல் நாம் எவரும் உறுதிப்படுத்த முடியாது. குறிப்பாக சசிகலாவின் வெற்றிக்கான அறிகுறி குறித்தும், சுமந்திரன் பதவிக்கு வந்தமை குறித்தும் கேட்ட போதே அவரது பதில் இவ்வாறு அமைந்திருந்தது. ஓர் ஆதாரமற்ற பெறுபேறுகளை செவிவழி ஆதாரமாக கொள்ளமுடியாது என்பதுடன் இவ்வாறான பாரபட்சம் இடம்பெற சாத்தியம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.அத்துடன், அவதூறு அமைதிக்கான பிரச்சனைகள் பற்றிய முறைப்பாடுகள் அதிகம் பதிவு செய்யப்பட்டதுடன், இனமத வாதங்களை தூண்டும் செய்திகளும் இத்தேர்தல் காலங்களில் பதிவாகியுள்ளன என்பதனையும் அவரது கலந்துரையாடல் மூலம் அறிய முடிந்தது. வவுனியா மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகாரியாக செயற்பட்ட ஒருவர் (சி.எம்.இ.வி)குறிப்பிடுகையில், தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் பொலீஸாரிடமிருந்தும் வன்முறைப்பதிவுகள் சி.எம்.இ.விக்கு வரும்.

தேர்தல் காலம் தொடக்கம் முடியும்வரை வன்முறைகாலம், நிலைமாறும். இதில் விருப்பு வாக்கு பிரச்சனை, போஸ்டர் அடித்தல், வினியோகித்தல் பிரச்சனை என அவை வன்முறைகளாக மாறும். போஸ்டர் வன்முறை என்பது ஒருவர் ஒட்டியதன் மேல் இன்னொருவர் ஒட்டிவிட்டு செல்வார். ஒரு கட்சிக்குள் இருவர் விருப்பு வாக்கு பிரச்சனையில் ஈடுபடுவார். அமைப்புக்கள், சங்கங்களுக்கு வேட்பாளர்கள் இலஞ்சம் கொடுப்பது, சாமான்கள் கொடுப்பது என்பது தடை/சட்டம்.வாக்குச் சாவடிக்குள் ஆயுததாரி போகமுடியாது. ஆனால் 2020ல் சென்றுள்ளனர். வாகனத்தில் ஸ்ரிக்கட் ஒட்டுவது தடை, பேனர் கட்டுவது தடை,பிரச்சாரத்தில் சிறுவர்களை பாவிப்பது தடை, இவை தடைகளாக இருந்தும் அவற்றை மீறிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஊடகங்களும் கட்சி சார்ந்து இயங்குவதான முறைப்பாடும் உள்ளன. சில சட்டங்கள் பொருத்தமில்லையாயினும் போடுவதுண்டு. ஆனால் அவை வலுவிழந்தவையாகவே வடக்கில் உள்ளன. நடைமுறையில் இல்லை

. எம்மைப்பொறுத்தவரை சகல முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படுமே தவிர அவற்றிற்கு தீர்வு கொடுப்பது நாமல்ல. முறைப்பாடுகள் பதிவு செய்பவர்கள் ஆதாரத்துடன் பதிவு செய்தல் மிக முக்கியம் ஆகும் என்றார்

.தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உரிய கட்சிகளை அழைத்து விளக்கம் செய்திருந்தோம். தனிப்பட்ட ரீதியில் எந்த அணுகுமுறையுமின்றி அனைவருக்குமான முறையில் செயற்பட்டோம். “கொரோணா சூழ் நிலையில் முறைப்பாடுகளை கையாள்வது கடினம் குறித்த கட்சி ஒன்றினை அழைத்து அவர்களின் புகைப்படம் அடங்கிய பதாகை அகற்றப்படாதிருந்த போது அதனை 5 கட்சிகளின் அலுவலகங்களில் அகற்றினோம். “தொடர்ச்சியாக அனைவருக்கும் அறிவித்துள்ளோம்” கட்சி சின்னம் வேட்பாளர் புகைப்படம் இன்றிய வகையில் அகற்றப்படல் வேண்டும். இவ்வாறு குறிப்பிடுவதனூடாக ஏதோ ஓர் வகையில் பக்கச்சார்பு இன்றி செயற்பட விரும்புவதனை இவ் ஊடக சந்திப்பின் ஊடாக யாழ் அரச அதிபர் வெளிப்படுத்தியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. “அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை சில கட்சிகளில் உயர்மட்டப்பதவிகளில் ஆகக்குறைந்தது. ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. சில கட்சிகள் பெண்களை அவமதிப்பதற்காக முக்கியத்துவமற்ற பதவிகளை வழங்கியுள்ளன. அதனால் பெண்கள் கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. எனவே எல்லாக்கட்சிகளும் தமது கட்சிக்கொள்கை உருவாக்கம் மற்றும் நிருவாகப் பதவிகளில் பெண்களை நியமிப்பதற்கு கட்டாய ஒதுக்கீட்டு சட்டம் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என்கிறார். (dissanayaka 2019)

இறுதியாக, கல்வி முறையில் பெண்கள் பிரதி நிதித்துவம் குறித்து பாடத்திட்டம் கொண்டுவரப்படல் வேண்டும். ஊடகங்களில் தனிப்பட்ட பெண்கள் குறித்த பிரச்சாரங்கள், வெறுப்பூட்டல்கள் தவிர்க்கப்படல் வேண்டும், வேட்பாளர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படல் வேண்டும்.வேட்பாளர்களின் வயது கட்டுப்பாடு தீர்மானிக்கப்படல் வேண்டும். இத்தகைய சட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின் கட்சிகளுக்கிடையேயும் சரி, கட்சிகளுக்கு உள்ளேயும் சரி ஆண், பெண் பிரிவினையின்றி, பக்கச்சார்பு மற்றும் பாரபட்சம் இன்றி தேர்தலில் பங்குபற்றும் உரிமைகளை வெல்லும் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.அத்துடன் பெண்களுக்கான பங்கு 50%-50% என்ற நிலையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்தல் குறித்த காலப்பகுதியில் இடம்பெறவேண்டும் என்ற கட்டாயப்படுத்தலும், தேர்தல் நாட்காட்டியும் அவசியமாகின்றது. பெண்களுக்கான வாக்குகளை பெண்கள் முன்னிலைப்படுத்தும் திட்டம் அவசியமாகின்றது. பாரம்பரியக்கட்சிகளும் பெண்களுக்கான சந்தர்ப்பங்களை கொடுத்தல் வேண்டும். திறமையான பெண்களுக்கான வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கான தனிக்கட்சி உருவாக்கத்திற்கான சூழலை வடக்கில் ஏற்படுத்தியுள்ளது எனில் அதுகூட பெண்கள் மீதான பாரபட்சத்தின் அடிப்படையிலாகும். (அனந்திசதிதரனை தலைமையாகக்கொண்ட கட்சி) மக்கள் சார் அபிவிருத்தி, நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு பாரபட்சமற்ற தேர்தல் சட்டங்கள் அவசியம் என்பதனையே வலியுறுத்த வேண்டியுள்ளது.“தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் பெண் உரிமை அமைப்பினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் படி பெண் வேட்பாளர்கள் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட ஆண் வேட்பாளர்களாலும் மதத்தலைவர்களாலும் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதுடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டும் பெண்செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டன.”(gazettee of the democratic socialist republic of Srilanka feb.15.2016 repart)”2020 தேர்தல் முழு உலகையும் முடங்கச் செய்த கொடிய நோயுடன் ஆரம்பிக்கப்பட்டது. 11.3.2020 முதலாவது நோய்கிருமி கண்டு பிடிக்கப்பட்டதும், நோய்ப்பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதற்கான பல்வேறு திட்டமிடல்களை கட்டாயப்படுத்தும் நிலை உருவானது. பொதுமக்கள் ஒன்றுகூடலை தவிர்த்தல், சமூக இடைவெளி பேணல், கைகளை கழுவுல், என்பனவற்றுடன் பொதுக்கூட்டம், வாகனப்பேரணி, பாத யாத்திரை, என்பனவும் தடைசெய்யப்பட்டன.

வாக்களிப்பு நிலையம் பொலீத்தீன் இட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாய் மூக்கு மூடி வெப்ப நிலை அளவிடப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டே வாக்களிப்பு நிலையம் இயங்கியது. மாதிரி வாக்களிப்பு நிலையம் ஏற்பாடுகளும் பரீட்சார்த்தமாக இடம் பெற்றன. (புள்ளடியின்பலம்-2020)இத்தகைய சூழ் நிலையிலும், கட்சிகள் தங்கள் வன்ம தேசங்களில் இருந்து குறையவில்லை. அவர்கள் தமக்கான பண்பாட்டு அரசியலை முன்னெடுக்க எவ்வாறான முரண் காரியங்களை செய்ய முடியுமோ அவற்றை முன்னிறுத்த தயங்குவதில்லை என்பது வடக்கின் தேர்தல்கால வன்முறை, பாரபட்சங்களின் பதிவுகள் எடுத்துக்காட்டாகும்.மேலும், குறித்த ஆய்வுக்காக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இருந்து 2013-2020 வரையான காலப்பகுதியில் (37+24+85+59+135) 340 வன்முறை குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றினதும் அடிப்படையில் தொகுத்து நோக்குவோமாயின், தேர்தல் காலங்களில் இடம்பெறும் பாரபட்சம், வன்முறை குறித்து அவை முழுமையான தீர்வை வெளிப்படுத்தவில்லை.

சிறிய சிறிய முறைப்பாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டமைக்கு யாழ் அரச அதிபரின் கருத்தை உதாரணமாகக் கொள்ள முடிகின்றபோதும்,  பாரபட்சம் குறித்து எந்தவொரு நடவடிக்கைகளும் வெளிப்படையாக இல்லை. ஆனால் பிரித்து பார்க்கப்படல், பக்கச்சார்பாக செயற்படல் என்பன வெளிப்படையாக இடம்பெற்ற போதும் அவை மிக அமைதியாகவே ஒடுக்கப்பட்டுச் சென்றமைக்கு திருமதி ரவிராஜ் சசிகலாவின் பின்னணியை ஆராய முடியும். அதேபோன்று டி.என்.ஏ கட்சிகளில் வேட்பாளராக களம் இறங்க முன்னின்ற பெண் வேட்பாளரை நிதி மோசடியில் வழக்கிட்டமையும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்களை வடக்கில் களமிறங்க ஏற்பாடு செய்ததுடன் வடக்கில் ஆளுமையான பெண்கள் இல்லை என ம.சுமந்திரன் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்க விடயங்கள் ஆகும்.

எனவே, நேரடியான மறைமுகமான பாரபட்ச மன நிலைகளை தடுக்கும் வகையில் தேர்தல்கால சட்டங்களை சரியாக பயன்படுத்தும் நிலை ஏற்படுமாயின் மேற்குறித்த நிலைமைகள் ஏற்படாதிருக்க வழி வகுக்கும்.

யாழ்.தர்மினி பத்மநாதன்

Exit mobile version