தொடரும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு – வடமராட்சி பகுதியில் மக்கள் பெரிதும் பாதிப்பு

WhatsApp Image 2022 04 04 at 10.10.10 AM 1 தொடரும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு - வடமராட்சி பகுதியில் மக்கள் பெரிதும் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக எர்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட பின்னர் ஓரளவு தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றிற்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிவருகிறது.

மண்ணெண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு சமூகத்தில் பல தரப்பினரையும் வெகுவாக பாதித்துள்ளது. வடமராட்சி பகுதியில் மண்ணெண்ணெய்க்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினமும் (04) பருத்தித்துறை மந்திகை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் வடமராட்சி பகுதியில் உள்ள, மண்ணெண்ணெய் அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்யும் மக்கள், கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய்க்கு நிலவும் தட்டுப்பாட்டு நிலையானது கடற்றொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. நாளாந்தம் மணித்தியால கணக்கில் வரிசையில் நின்றாலும் மட்டுப்படுத்தப்பட்டதாக கிடைக்கும் எண்ணெய் கடற்றொழில் நடவடிக்கைக்கு போதுமானதாக இல்லாத நிலை காணப்படுவதனால் கடற்றொழிலை சீராக முன்னெடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் வருமானமின்றி பெரும் வாழ்வாதார நெருக்கடியையும் வடமராட்சி பகுதி மீனவர்கள் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.