தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு- வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் திருகோணமலை நகரில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகஸ்தரின் களஞ்சியசாலையிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட வெற்று சிலிண்டர்களுடன் நடுவீதியில் இன்று (22) அதிகாலை ஒரு மணி முதல் சமையல் எரிவாயு கொள்வனவிற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் ஒரு தொகுதி திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்புவதாகவும் மிகுதி இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உணவகங்களுக்கு ஒதுக்கியதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவ்வாறு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதுமானதாக இல்லை எனவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் இன்றைய தினம் வருகைதரும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்குவதாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு திருகோணமலை விநியோகஸ்தர் தெரிவித்தார்.

இருப்பினும் இன்று அதிகாலை ஒரு மணி முதல் வயோதிபர்கள்,பெண்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் நீண்ட வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வீதியில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News