மட்டக்களப்பில் தொடரும் மண் அகழ்வு

மட்டக்களப்பில் தொடரும் மண் அகழ்வு

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் சட்ட விரோத  மண் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தளவாயில் உள்ள மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் உள்ள காணியொன்றில் பெருமளவு மண் அகழப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

காணியொன்றில் பாரியளவில் முன்னெடுக்கப்படும் இந்த மண் அகழ்வு குறித்து எந்தவித தகவலும் இல்லையெனவும் கனரக வாகனங்களைக்கொண்டு சிலர் குறித்த பகுதியில் இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பகுதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் போராடிவரும் நிலையில் எழுவான்கரை பகுதியில் தனியார் காணிகளின் மண் அகழ்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண் விற்பனையை நோக்காககொண்டே குறித்த பகுதியில் இவ்வாறான மண் அகழ்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் காணிகளில் மண் அகழ்வுகள் முன்னெடுப்பதனாலும் அதற்கான அனுமதிகள் பெறவேண்டிய நிலையுள்ளபோது யார் இதற்கான அனுமதியை வழங்கினார் எனவும் அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மட்டக்களப்பில் தொடரும் மண் அகழ்வு இடம்பெறும் காணிக்கு அருகில் கிழக்கின் அரசியல் கட்சியின் முக்கியஸ்த்தரின் காணியும் உள்ள நிலையில் இந்த மண் அகழ்வு குறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவருகின்றனர்.