இளைஞர்களுக்கும் பௌத்த மதகுருவுக்கும் இடையில் முரண்பாடு- இளைஞன் உயிரிழப்பு

இளைஞர்களுக்கும் பௌத்த மதகுருவுக்கும்

இளைஞர்களுக்கும் பௌத்த மதகுருவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான வாகரை, ஓமனியாமடு விஹாரதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து ஏற்பட்ட  வெடிப்பு சம்பவம் ஒன்றில்   இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு – கல்மடு மலையடிவாரம் எனும் இடத்தில் வைத்தே   இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அங்கு சென்ற ஏழு இளைஞர்களுக்கும் ஓமனியாமடு விஹாரதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது இளைஞனின் வயிற்றில் யானைகளை விரட்டப் பயன்படுத்தும் வெடி பட்டதில் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விஹாரதிபதி பொலன்னறுவை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிபதி ஈ.எல். சஹாப்தீன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மரணித்த இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

மது போதையில் இளைஞர்கள் அட்டகாசம் புரிந்ததில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக   விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த வாழைச்சேனை காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.