தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிடாமை கவலையளிக்கிறது-சாணக்கியன்

கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலையளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று (20) இடம்பெற்ற நிலையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தொடர்பாகவோ, 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவோ எந்தவித கருத்துக்களையும் அவர் தெரிவிக்காமை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு ஒன்று இல்லாவிட்டால் தமிழ் மக்களின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதை தமிழ் மக்கள் மனதில் வைத்து இனிவரும் காலங்களில் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.