கொரோனா அவலம் குறித்து முகநூலில் பதிவிட்ட மருத்துவரிடம் சி.ஐ.டி. விசாரணை

அவிசாவளை பொது வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் கடமையாற்றும் மருத்துவர் நஜித் இந்திக சி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார். அவிசாவளை வைத்தியசாலையின் நிலை தொடர்பாக முகப் புத்தகத்தில் அவர் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியிலேயே அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அவிசாவளை மருத்துவமனையின் தற்போதைய நிலையை விபரித்த மருத்துவர், “மக்கள் ஈக்களைப் போல இறக்கிறார்கள்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகவே சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

“அவிசாவளை பொது வைத்தியசாலை தொடங்கப்பட்ட நாளிலிருந்து நான் கொரோனா நோயாளர் விடுதியில் பணிபுரிந்து வருகிறேன். மருத்துவர்களாக நாங்கள் பன்னிரண்டு கோவிட்-19 நோயாளர் விடுதிகளில் கடமையாற்றுக்கின்றோம். இப்போது அவை நிரம்பி விட்டன. தினமும் சுமார் 100 கோவிட்-19 நோயாளிகள் நாற்காலிகள் மற்றும் தரையில் சிகிச்சை பெறுகிறார்கள். முடிந்தால், எல்லா வேலைகளையும் இடைநிறுத்தி வீடுகளுக்குச் செல்லுங்கள். மக்கள் ஈக்களைப் போல இறக்கிறார்கள்” என அவிசாவளை பொது வைத்தியசாலையின் கொவிட் விடுதியில் கடமையாற்றும் நஜித் இந்திக என்ற மருத்துவர் தனது முகப் புத்தகத்தில் பதிவை இட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது;

“வேலை தொடர்பான மன அழுத்தம் பற்றி கேட்ட மற்றும் படித்த பிறகு, அது உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன். ‘ஒட்சிசன் தீர்ந்து விட்டது’ என்ற உணர்வு.

இதுவரை வந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்கள் சிரமப்படும் விதம், ஒட்சிசன் கொடுக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை, சிரமம் உள்ள நோயாளிகளின் வயது நிலைகள், இவை அனைத்தும் ஒரே வாரத்தில் மாறின.

அது ஒரு பெரிய வித்தியாசம். விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

முன்பை விட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் சூழ்நிலையில், 70 மற்றும் 80 வயதுடைய பெற்றோர்கள் முன்பு கொஞ்சம் கடினமாக இருந்தனர். இப்போது அது 30 மற்றும் 40 வயதுடையவர்களுக்கு கடினமாக உள்ளது.

இன்னும், இன்னும் , ஒட்சிசன் வழங்கல் இயந்திரங்கள் அதிகபட்ச வரம்பில் இயங்கும் போது கூட, மக்கள் இறப்பதற்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாற்பது வயதில் ஒரு தாய் தன் மகளுக்கு முன்னால் மூச்சுத் திணறலால் இறந்தார், சி.பி.ஏ.பி. ஒரு இயந்திரத்தில் இணைக்கப்பட்டிருப்பதால், பேசுவதில் சிரமம் உள்ள ஒரு மனைவி தன் கணவருடன் கைகோர்த்து கண்களினால் விடை பெற்றார்.

அவரது மனைவி இரட்டைக் குழந்தைகள் பிறப்புக்குத் தயாராகி கொண்டிருந்தபோது, 27 வயதான கணவர் ஒன்றும் செய்ய இயலாது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த விகிதத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒட்சிசன் இல்லாததால் மக்கள் நாற்காலிகளிலும், தரையிலும் முற்றத்திலும் இறந்து விடுவார்கள்.

எனவே, இதையெல்லாம் பார்த்து விட்டு நேற்று மாலை (கடந்த வியாழன்) நான் வீட்டுக்கு வந்தபோது, ஹெகலிய ரம்புக்வெலவின் கதையை பார்த்தேன்.

“எதுவாக இருந்தாலும், நாடு மூடப்படாது, தடுப்பூசி போடப்பட்டு வாழ்க்கை கடவுளிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்த கடிதம் இங்கே நிறுத்தப்படுகிறது. ஏனென்றால் எனக்குத் தடையற்ற மொழியில் எழுதத் தெரியாது. முடிந்தவரை கவனமாக இருங்கள்! முடிந்தால், எல்லா வேலைகளையும் இடைநிறுத்தி வீடுகளுக்குச் செல்லுங்கள்! மக்கள் ஈக்களைப் போல இறக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021