இலங்கைக்கு சீன வங்கி அனுப்பிவைத்துள்ள கடிதம் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெறுவதற்கு போதுமானதல்ல- இலங்கை அதிகாரி

இலங்கைக்கு சீனாவின் எக்சிம் வங்கி அனுப்பிவைத்துள்ள கடிதம் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு போதுமானதல்ல என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த இலங்கை தரப்பு தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீனாவின் எக்சிம் வங்கி இலங்கையின் கடன்களை இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைப்பதற்கு முன்வந்துள்ளதுடன்  சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடனை பெறுவதை உதவுவதாக தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர்  அந்த கடிதத்தை பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா இந்த மாதம் தான் இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணம் ஆகியவை மூலம் ஆதரவளிப்பதாக தெரிவித்தது ஆனால் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு  சீனாவின் ஆதரவு அவசியம்.

கடந்த ஏழு தசாப்தகாலங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கைக்கு அதிக கடனை வழங்கிய நாடுகளாக போட்டியாளர்களான சீனாவும் இந்தியாவும் காணப்படுகின்றன.

இலங்கையின்  வேண்டுகோளின் அடிப்படையில்  உடனடி நடவடிக்கைகளிற்காக2022 மற்றும் 2023 இல் கடன் சேவை நீடிப்பை வழங்கப்போவதாக இலங்கைக்கு சீனாவின் எக்சிம் வங்கி  அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

2020 இறுதியில் சீனாவின் எக்சிம் வங்கி இலங்கைக்கு 2.83 பில்லியன் டொலரை  கடனாக வழங்கியிருந்தது,இது இலங்கையின் கடனின் 3.5 வீதமாகும் என சர்வதேச நாணயநிதியம் கடந்த மார்ச்மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலே குறிப்பிட்ட காலகட்டத்திற்காக வட்டியின் அசல் மற்றும் வட்டியை நீங்கள் திருப்பி செலுத்தவேண்டியதில்லை என சீன வங்கி  இலங்கைக்கான தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்த காலத்தில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளோம் என சீன வங்கி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை சீனாவின் கடன்வழங்குநர்களிற்கு 7.4 பில்லியன் டொலர்களை கடனாக திருப்பி செலுத்தவேண்டும் .

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச நாணயநிதியத்தின் நிதியை பெறும் அதன் முயற்சிகளிற்கு உதவதயார் எனவும் சீன வங்கி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரங்களுடன் நெருக்கமான இலங்கை அதிகாரியொருவர் இந்தியா வழங்கியதை போல சீனாவும் தெளிவான உத்தரவாதத்தை வழங்கும் என இலங்கை எதிர்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சீனா இதனை விட அதிகமாக செய்யும் என நாங்கள் எதிர்பார்த்தோம்,இது நாங்கள் எதிர்பார்த்ததை விட எங்களிற்கு தேவையானதை விட குறைவானது என அவர் தெரிவித்தார்.

ரொய்ட்டரின் கேள்விகளிற்கு இலங்கையின் நிதியமைச்சும் வெளிவிவகார அமைச்சும் உடனடியாக பதிலளிக்கவில்லை.