தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை- மத்திய அரசிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

202108041254595775 Tamil News Tamil News Chief Minister MK Stalin letter to Foreign SECVPF தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை- மத்திய அரசிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் திகதி கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக  மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்திருந்தார். இது முதல் முறையல்ல. தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதோடு, கைது செய்வது படகுகளை சேதப்படுததுவது எனத் தொடர்ந்து னொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்,

கடந்த ஓகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒன்பது மீனவர்களும் இந்தத் தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர்.

சர்வதேச சட்டங்களையும் நடை முறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

இந்தச் சம்பவம், தமிழ் நாட்டில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பல்லாயிரக் கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதார த்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று  வலியுறுத்தியுள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021