வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வைக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

100 நாட்கள் செயல்முனைவின் 75 ஆவது நாள் மக்கள் குரல்  திருகோணமலை மாவட்டத்தில்  தம்பலகாமம்  பிரதேசத்திலுள்ள முள்ளிப்பொத்தானை 9ம்கொலனியில் இன்று (14) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலமாக பதாகைகளை ஏந்தியவாறு தங்களது கோரிக்கைகளை  கவயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் முன்வைத்தனர்.

100 நாட்கள் செயல்முனைவின் 75 ஆம் நாள் போராட்டத்தில் திருமலை பிரதேசத்தில் உள்ள பிரதேச பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள், சிறுகுழுக்களின் அங்கத்தவர்கள், ஆண்கள்  மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

“வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை.

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ” “13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது ” பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தினை  கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.