Tamil News
Home செய்திகள் மே18 ஐ தமிழினப் படுகொலை நாளாக கனேடிய பாராளுமன்றம் பிரகடனம்- இலங்கை கண்டனம்

மே18 ஐ தமிழினப் படுகொலை நாளாக கனேடிய பாராளுமன்றம் பிரகடனம்- இலங்கை கண்டனம்

கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், இலங்கைக்கான பதில் கனேடிய துாதுவரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் பிரேரணையில் உள்ள இனப்படுகொலை என்ற விடயமானது போலியானது எனவும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் Amanda Strohan அமண்டா ஸ்ரோகனை, வெளிவிவகார அமைச்சரிற்கு இன்று அழைத்து ஜி.எல். பீரிஸ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பொய்யானது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதோடு கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினால் இலங்கை தொடர்பில் தவறான எதிர்க்கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 இனப்படுகொலை தீர்மானத்தை கனடா பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக ஏற்று அங்கீகரித்தது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version