கோட்டாபயவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கைக்கு கனேடிய எதிர்க் கட்சி ஆதரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தை உறுதி செய்ய கனடா அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பைக் கொண்டுவருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான கோரிக்கைகளில் இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணிகளுடன் இணைந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் கணவனை இழந்த பெண்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும் இலங்கையின் வடக்கு,கிழக்கை இராணுவமயமற்ற பகுதிகளாக்குமாறும் ஒரு தசாப்தத்துக்கு மேலாக வலியுறுத்தி நின்றோம்.

ஆனால் அமைதியான எவ்வித போராட்டங்களும் அற்ற வடக்கு,கிழக்கு உலகில் அதிக இராணுமயமாக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இன்றைய குழப்பத்துக்கும் சீர்கேட்டுக்கும் ராஜபக்ச அரசே காரணம் என்ற எமது புரிதலை இன்று உலகே புரிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்குப் பின்னர் நல்லிணக்கத்தை நீண்டகாலம் நாம் வலியுறுத்தியதுடன் அரசியல் கைதிகளின் விடுதலையையும் கோரி நின்றோம்.
அத்துடன் அதிகார வெறி கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துவிடுங்கள் என்ற இலங்கை மக்களின் கோரிக்கைக்கு மரியாதை செலுத்துமாறும் வேண்டுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒத்தாசையாக யாழில் கனடிய துணைத்தூதுவராலயத்தை அமைப்போம் எனவும், போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கன்சவேட்டிவ் கட்சிக்கான புதிய தலைவருக்கான தேர்தலில் அக்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர்.

அதன் முடிவுகள் வரும் செப்டம்பர் 10ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதில் கன்சவேட்டிவ் கட்சியின் முன்னாள் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் உட்பட பலரின் ஆதரவைப் பெற்றிருக்கும் பியர் பொலிவேராவே வெற்றி பெறுவார் என்ற நிலையில் அவர் ஈழத்தமிழர் விவகாரத்தில் காத்திரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச அளவில் சிறப்பாக செயற்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டை இவ்விவகாரத்தில் தனது ஆலோசகராகவும் பியர் பொலிவேரா நியமித்துள்ளார்.