வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு-யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று  (02) யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினராகிய நாம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து சிறிலங்காவின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்கு முறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் எமது மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையின் இன்றைய பொருளாதாரப் பின்னணியில் எழுந்துள்ள சூழலில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டிய அவசியத்தாலும், கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலும் வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணியொன்றைத் திட்டமிட்டு ஊடகத்தினரை கடந்த ஜனவரி 26ஆம் திகதி சந்தித்திருந்தோம்.

பின்னர் எமது கரிநாள் பிரகடனம் மற்றும் பேரணிக்கான நிலைப்பாடுகளை எமது மக்களுடன் கலந்துரையாடும் நோக்குடன் கடந்த ஒரு வார காலமாக வடக்கு கிழக்கெங்கும் மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் மற்றும் மாணவர்களுடனும் பல சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தோம்.

அனைத்து தரப்பினரும் மாணவர்களாகிய நாம் முன்னெடுத்துள்ள நிலைப்பாடுகளையும், செயற்பாடுகளையும் மிகவும் வரவேற்றதோடு, முழு ஒத்துழைப்பை நல்குவதாகவும் கூறி நின்றனர். அத்தோடு பேரணி தமிழர் தேசத்தின் அடிப்படைகளை முன்னிறுத்தி நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நின்றனர்.

இது மட்டுமல்லாது, இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் நிலைமைகளில் மாணவர்களே தீர்க்கமாக விடுதலை போராட்டத்தினை கையிலெடுத்து முன்செல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இக்கருத்துக்கள் யாவும் எம்மையும், நாம் முன்னெடுக்கும் எழுச்சிப் பேரணியையும் வலுப்படுத்துவதாகவே நாம் காண்கிறோம்.

அந்த வகையில், தமிழ் மக்கள் மிகப் பேரெழுச்சியுடன் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த தேசியம் என்பவற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இப் பேரணியை மேலும் வலுப்படுத்த வடக்கு கிழக்குத் தழுவிய எமது வர்த்தக சமூகத்தினரையும், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற் சங்கங்களையும் பெப்ரவரி 4 கரிநாள் அன்று தொழில் புறக்கணிப்பையும், முழுமையான கடையடைப்பையும் மேற்கொண்டு ஹர்த்தாலை முழுமையாக அனுஸ்டித்து சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதை சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும் உரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

அத்துடன் இத்தினத்தில் உங்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள், தொழில் இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு காலாகாலமாக நாம் சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர் தேசமாக முன்னெடுக்கும் போராடத்தில் இணைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்படும் இப் பேரணியானது பெப்ரவரி 4ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி நாச்சிமார் கோவிலடியூடாக பிரதான தபால் அலுவலகம், தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக் கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும். செம்மணியிலிருந்து வாகனங்களில் பயணிக்கும் பேரணியானது நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து முதலாம் நாளின் இறுதி நிகழ்வை இரணைமடுவில் நிறைவு செய்து கொள்ளும்.

இரண்டாம் நாள் பேரணி பெப்ரவரி 5ஆம் நாள் காலை 9மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்துக் கொண்டு காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி புறப்படும். செல்லும் வழியில் புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை வந்தடையும், அங்கிருந்து முள்ளிவாய்க்கால் சென்று உறுதியெடுத்துக் கொண்டு முல்லைத்தீவைச் சென்றடையும்.

ஊடறுத்துச் செல்லும் அனைத்து ஊர்களிலும் அணிதிரளும் மக்களுடன் எழுச்சியாய் முன்னேறி முல்லைத்தீவை சென்றடையும் பேரணி இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வை முல்லைத்தீவில் நிறைவு செய்யும்.

மூன்றாம் நாள் பெப்ரவரி 6ஆம் திகதி காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடியூடாக திருகோணமலையை மதியம் 1.30 மணியளவில் வந்தடையும் பேரணி திருகோணமலையின் எழுச்சி நிகழ்வுகளில் இணைந்த கொள்ளும். பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் வெருகலில் மூன்றாம் நாள் நிகழ்வினை நிறைவு செய்யும்.

நான்காம் நாள் பெப்ரவரி 7ஆம் திகதி காலை 10 மணிக்கு பேரணி வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டுநகரை வந்தடையும் அதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சசியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொது கூட்டத்துடன் பேரெழுச்சியாக நிறைவு பெறும்.

இப்பேரணிகளில் மாணவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலை அலையாக இணைத்து தமிழ் தேசத்தின் நிலைப்பாட்டினை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.