திருகோணமலை: ராஜவந்தான் மலைக்குச் சென்ற தமிழர்களை தடுத்து அச்சுறுத்திய பௌத்த மதகுரு

தமிழர்களை அச்சுறுத்திய பௌத்த மதகுரு

தமிழர்களின் தொல்பொருள் அடையாளங்கள் பல உள்ள திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள ராஜவந்தான் மலைக்கு இன்று காலை தமிழ் மக்கள் மற்றும் சைவ மதகுருக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகச் சென்ற போது பௌத்த மதகுரு ஒருவர் வீதியை மறித்து மக்களை தொடர்ந்து செல்லவிடாது தடுத்துள்ளார்.

அத்துடன் அங்கு சென்ற தமிழர்களை இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் மிகவும் கீழ்த்தரமாக பேசியும் அவர்களின் தொலைபேசிகளை பறித்து எறிந்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது அங்கு நின்ற காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களும் மக்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இந்த ராஜவந்தான் மலையின் கீழ் சகாயபுரம் (வெட்டுக்காட்டுச்சேனை) மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

அப்பிரதேச மற்றும் அயல்ப்பிரதேச மக்கள் மலையின் மீது சென்று வழிபட்டுவந்த நிலையில் மூன்று வருடங்களிற்கு முன்னர் மலையின் மேல் இருந்த வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த சின்னங்களை நிறுவும் வேலைகள் நடைபெற்று வருகின்றதெனவும் தெரியவருகின்றது.

Tamil News