அக்கரப்பத்தனை: ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிலைகள் உடைப்பு-மக்கள் போராட்டம்

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்

நுவரேலியா: அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அக்கரப்பத்தனை நகரத்தில் இதுவரை காலமாக சைவ ஆலயம் ஒன்று இல்லாத நிலையில் புதிதாக புனரமைக்கப்பட்ட குறித்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலேயே இவ்வாறு சிலைகள் மற்றும் விக்கிரங்கள் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் இம்மாதம் 19ம் திகதி முதல் 23ம் திகதி வரை கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்களும் அனைத்து கடைகளையும் மூடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.