நிலாதமிழ் அவர்களின் படைப்பான மாவீரர் வரலாற்றுப் பதிவாக நினைவழியா நினைவுகள்-என் நினைவில் மாவீரர்கள்-நூல் வெளியீடு விழா 19.09.21 அன்று மாலை லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும் போராளி மாவீரர் உறவுகளும் நண்பர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தமிழ் அமைப்புக்கள் சார் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமதி.சந்திரிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு. ரேணுதாஸ் இராமநாதன் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பிரித்தானியத் தேசியக்கொடியினை திரு சுடர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியினை திரு.மலரவன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு.ஐங்கரன் அவர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து மாவீரர் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை நிதித்துறைப் பொறுப்பாளர் பாலதாஸ் அவர்களின் சகோதரி அணிவித்தார். அகவணக்கத்தினைத் தொடர்ந்து வரவேற்புரையினை திருமதி.பவானி அவர்களும் நூல்அறிமுகத்தினை மாவீரரின் சகோதரியான திருமதி.ரேணுகா உதயகுமார் அவர்களும் ஆற்றினர்.
தொடர்ந்து நூலை திரு.சுரேஷ் அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியினை நிதித்துறைப் பொறுப்பாளர் பாலதாஸ் அவர்களின் துணைவியார் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது பிரதியை நூலாசிரியரின் சகோதரி திருமதி. சித்திரா இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். திரு சுரேஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியினைத் தொடர்ந்து ஆசியுரையினை போரியல், அரசியல் ஆய்வாளரான திரு.ரவி பிரபாகரன்(ஆரூஸ்) அவர்கள் வழங்கினார்.
மதிப்பீட்டுரையினை திரு.வாணன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்புரையை திரு.வாமன் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து, ஏற்புரையை திருமதி. நிருபா அவர்களும் நன்றியுரையினை திருமதி. ஆரபி அவர்களும் நிகழ்த்தியிருந்தனர்.
இந்நூல் வெளியீட்டுவிழா நிகழ்வின் இறுதிப்பகுதியாக தேசியக் கொடியேற்பு நிகழ்வுடன், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் “என்ற எழுச்சிப்பாடல் ஒலிக்க உணர்ச்சிப் பெருக்குடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.