திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட அருட்தந்தை அன்ரன் றஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் இம்மாதம் 29ம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள புனித லூசியா தேவாலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்படுவார்.
ஆயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் 53 வயது நிரம்பிய அருட்தந்தை பிள்ளைநாயகம் அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர். 2000ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி இதே புனித லூசியா தேவாலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயராகத் தெரிவு செய்யப்படும் நேரத்தில் அருட்தந்தை அவர்கள் கொழும்பு மறைமாவட்டத்தின் இறையியற் கல்லூரியின் இயக்குநராகவும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் துணை அதிபராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆயராக அருள்பொழிவு செய்யப்படும் அருட்தந்தைக்கு இலக்கு இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்து நிற்கிறது.