இந்தியா: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இடம்பெற்ற இராணுவ உலங்குவானுர்தி விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Around noon today, an IAF Mi 17 V5 helicopter with a crew of 4 members carrying the CDS and 9 other passengers met with a tragic accident near Coonoor, TN.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று வானில் பறந்து கொண்டிருந்த இராணுவ உலங்குவான் ஊர்தி திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த உலங்குவானுர்தி விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். (டிசம்பர் 8, 2021) இன்று குன்னூரில் விபத்திற்குள்ளான Mi-17v5 உலங்குவானுர்தியில் இவர் தன் குடும்பத்தோடு பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பற்றிய சில குறிப்புக்கள்
ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார்.
டேராடூனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய இராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார்.
இராணுவ செயலர் பிரிவில், துணை இராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் இராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார்.
அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள இராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.
ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.