Home செய்திகள் மட்டக்களப்பு மண் ராஜபக்சாக்களின் கூடாரமா?- மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மண் ராஜபக்சாக்களின் கூடாரமா?- மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மண்

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழி தோண்டி கிறவல் அகழப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா என்ற பதாகைகளுடன் சிறுவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரிகளே கணிய வளத்தை சுரண்டுவதற்கு துணை வோவது ஏன்? ராஜபக்சக்களின் பெயர்களால் மண் சுரண்டல்,எமது வளத்தை சூரையாடாதே.பிரதேச செயலாளரே விவசாய நிலங்களில் கிறவல் ,மண் அகழ்வினை தடுக்கவும் போன்ற கோஷங்களைத் தாங்கிய வாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பகுதியில் கிரவல் தோண்டப்பட்டு பெரிய அளவிலான மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது குறித்த காணியில் பயன்தரும் மாம்பழம்,மாதுளை மரம், மரவள்ளி போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளது என குறித்த காணிக்கு உரிமை கோரும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் பயிர் செய்கை பண்ணுவதற்காக முன்பு கடமையாற்றிய பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் தற்போது அரச காணியில் எவ்வாறு பயிர் செய்ய முடியும் என பிரதேச செயலாளர் கேட்பதாக மக்கள் கவலை தெரிவித்தனர். இதேவேளை இக்காணிக்கான உரிமம் கோரி 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சந்திவெளியில் உள்ள ஒரு தனி நபருக்கு கிரவல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கிறவல் அகழ்விற்கு எதிராக வாழைச்சேனை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரை வினவியபோது,குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version