மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் இன்று காலை முதல் ப வேலை நிறுத்தத்திலும் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் உடைமைகள் கடந்த சில நாட்களாக சேதமாக்கப்பட்டுவருவதுடன் அதிபர் ஆசிரியர்களுக்கு சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டை செய்து வருகின்றனர்.
எனவே இதனைக் கண்டித்தும் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைக்குள் இருந்த சீசிரிவி கமராக்களை உடைத்துள்ளதுடன் பாடசாலை அதிபரின் காரியாலயம்,நடன ஆசிரியர் காரியாலயம் மற்றும் பாடசாலையின் தளபாடங்களை உடைத்துள்ளதுடன் சில மாணவர்களும் பெற்றோரும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் சுகுணதாஸ் ரவிசங்கர் தெரிவித்தார்.
பாடசாலையில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சம்பவங்கள் தொடர்பில் பாடசாலை சமூகமும் கிராம மக்களும் அக்கரையற்ற நிலையில் உள்ளதனால் தங்களுக்கு தொடர்ந்து இந்த பாடசாலையில் கடமையாற்ற முடியாத நிலையுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.