பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் பதாதைகளை ஏந்தியவாறு அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஆசிரியர் சங்கமானது அதிபர் ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குடா வலயக்கல்வி அலுவலக அதிபர்கள் ஆசிரியர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதுடன் அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பொன்னுத்துரை உதய ரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் .
வாழைச்சேணை சந்தியில் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் பேரணியாக கல்குடா வலயக்கல்வி அலுவலகம் வரை சென்று அங்கும் கோஷங்களை எழுப்பினர்.
‘அதிபர் ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு ,அதிபர் ஆசிரியர்களின் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக அங்கீகரி , சுபோதினி திட்டத்தை செயல்படுத்து, தரமான கல்விக்கு வழங்களை வழங்கு, மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கு 6 விதத்தை ஒதுக்கு,அதிபர் ஆசிரியர் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்து, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகசட்டமூலத்தை அமல் படுத்தாதே, ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து , இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தாதே ,அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி அதிபர் ஆசிரியர் சேவையை கௌரவப்படுத்து ,அரசே தரமான கல்விக்கு உடனடித் தீர்வு வழங்கு’ ,போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இதன்போது அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.